ஆண்களை ஏமாற்றி மோசடி ; நேர்முகதேர்வின் போது கையும் களவுமாக சிக்கிய பெண்
தென்கொரியா, இத்தாலி மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் மோசடி செய்த பெண் ஒருவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட விசாரணைப் பிரிவினர் கம்பஹா பிரதேசத்தில் கைது வைத்து செய்துள்ளனர்.
சந்தேகநபரான இந்தப் பெண் இவ்வாறு வேலை வாங்கித் தருவதாகக் கூறி நாட்டின் பல பகுதிகளிலும் உள்ள ஆண்களை ஏமாற்றி 50 இலட்சம் ரூபாய் பணத்தை பெற்றுள்ளார்.

வேலைவாய்ப்பு மோசடி
எனினும், குறித்த பெண் உறுதியளித்தபடி வேலைவாய்ப்பை வழங்கவில்லை என விசேட விசாரணைப் பிரிவுக்கு 8 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
அதன்படி, அதிகாரியர்கள் சந்தேகநபரை கைது செய்ய அவரது வீட்டிற்குச் சென்றபோதிலும், அவர் அதிகாரிகளைத் தவிர்த்து வந்துள்ளார்.
நேற்று (06) கம்பஹா பிரதேசத்தில் உள்ள ஒரு நிறுவனத்தில் இஸ்ரேலுக்கான வேலைக்கு ஆட்களைச் சேர்ப்பதற்காக நேர்காணல் நடத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அந்த இடத்திற்குச் சென்ற அதிகாரிகள், உரிய அனுமதிப்பத்திரம் இன்றி வெளிநாட்டு வேலைக்காக ஆட்களைச் சேர்த்தல் மற்றும் பணம் அறவிடுதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவரைக் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் கொட்டாவை, பன்னிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இவர் இதற்கு முன்னர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பில் பணியகத்தின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடிகள் தொடர்பில் வேறு பொலிஸ் நிலையங்களிலும் அவருக்கு எதிராக முறைப்பாடுகள் நிலுவையில் உள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.