இலங்கையின் மொத்த அரசாங்கக் கடன் தொடர்பில் வெளியான தகவல்
கடந்த ஜூன் 30 ஆம் திகதி நிலவரப்படி நாட்டின் மொத்த அரசாங்கக் கடன் 97.952 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அல்லது 32.977 டிரில்லியன் ரூபா என நிதி அமைச்சின் பொது கடன் முகாமைத்துவ அலுவலகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது கடன் முகாமைத்துவ அலுவலகத்தினால் கடந்த ஓகஸ்ட் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட இந்த அறிக்கையானது, கடந்த ஜூன் 30 ஆம் திகதி நிலவரப்படி மத்திய அரசாங்கத்தின் கடன் மட்டும் 31.999 டிரில்லியன் ரூபா அல்லது 95.047 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

உள்நாட்டுக் கடன்
இதற்கு மேலதிகமாக, மாகாண சபைகள் மற்றும் மாகாண நிறுவனங்களின் கடன் 20 மில்லியன் டொலர்கள் என்றும், அரசாங்கப் பிணையுடனான அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் கடன் 2.885 பில்லியன் டொலர்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாத இறுதியில் மத்திய அரசாங்கத்தின் உள்நாட்டுக் கடன் 57.039 பில்லியன் டொலர்களாக அல்லது 19.203 டிரில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளதாகச் குறித்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
அதில் செலுத்தப்படாத திறைசேரிப் பிணைமுறிகளின் அளவு 47.732 பில்லியன் டொலர்கள் அல்லது 16,069 பில்லியன் ரூபா எனவும், செலுத்தப்படாத திறைசேரி உண்டியல்களின் அளவு 7.045 பில்லியன் டொலர்கள் அல்லது 2,372 பில்லியன் ரூபா எனவும் பதிவாகியுள்ளது.
கடந்த ஜூன் மாத இறுதியில் மத்திய அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன் 38.008 பில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளது.
2026 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டின் இறுதியில் 37.468 பில்லியன் டொலர்களாக இருந்த அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கடன், இரண்டாவது காலாண்டின் இறுதியில் 38.008 பில்லியன் டொலர்கள் வரை 540 மில்லியன் டொலர்களால் அதிகரித்துள்ளதாகச் சம்மந்தப்பட்ட அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
அந்த வெளிநாட்டுக் கடன்களில் பலதரப்புக் கடன்களாக 14.802 பில்லியன் டொலர்களும், வர்த்தகக் கடன்களாக 12.409 பில்லியன் டொலர்களும் மற்றும் இருதரப்புக் கடன்களாக 10.797 பில்லியன் டொலர்களும் பதிவாகியுள்ளன.