சர்வதேசத்துடனான தொடர்பினை இழக்கும் அபாயத்தில் இலங்கை! வெளியான பகீர் தகவல்
இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலை காரணமாக இலங்கைக்கான விமானங்களை சர்வதேச விமான நிறுவனங்கள் இரத்து செய்யும் அல்லது குறைக்கும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கையில் தொடரும் சிக்கல் நிலைமைகள் காரணமாக விமானங்கள் எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால், குறித்த விமானங்கள் இலங்கைக்கு வரும் போது எரிபொருள் நிரப்பும் நோக்கங்களுக்காக எரிபொருளையும் எடுத்து வர வேண்டிய நிலைமை ஏற்படும்.
அவ்வாறான நிலமை ஏற்படுமெனில் அது அவர்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவதாக அமையும், விமானங்கள் சொந்த எரிபொருளைச் சுமந்து கொண்டு பறந்தால், சரக்குகளின் எடையையும், பயணிகளின் எண்ணிக்கையும் குறைக்க வேண்டிய நிலை ஏற்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது விமான நிறுவனங்களுக்கு மிகப் பெரிய தாக்கத்தை செலுத்தும்.
இதேவேளை இலங்கையில் போதியளவு எரிபொருள் இல்லாத பட்சத்தில் எரிபொருளை மீள் நிரப்புவதற்காக விமானங்கள் வேறு நாடுகளுக்கு சென்றாலும் கூட அது விமான நிறுவனங்களுக்கு கூடுதல் செலவினை ஏற்படுத்தும். இதன் காரணமாக விமான நிறுவனங்கள் இலங்கைக்கான விமானங்களை ரத்து செய்வதற்கோ அல்லது குறைப்பதற்கோ வாய்ப்பு இருப்பதாக அந்த தகவல்கள் கூறுகின்றது.
அதேவேளை எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இலங்கையில் கட்டுநாயக்க விமான நிலையம் உட்பட அனைத்து விமான நிலையங்களும் இம்மாதம் 31ஆம் திகதிக்கு பின்னர் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.