இலங்கையில் இனி வீட்டிலேயே சிறை ; நெரிசலை குறைக்க புதிய யோசனை
இலங்கையின் சிறைச்சாலைகளில் தங்கிப் இருக்கக்கூடிய கொள்ளளவை விட நான்கு மடங்கு அதிகமான கைதிகள் அங்குள்ளதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.
பூகொடை புதிய நீதிமன்ற வளாகத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதான விருந்தினராக இன்று (24) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

சிறைச்சாலை
இதற்கமைய, தற்போது 10,375 பேரையே தங்கவைக்கக்கூடிய சிறைச்சாலைகளில் அதைப்போல் நான்கு மடங்கு அதிகமானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இக்காரணங்களினால் சில குழுக்கள் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்குவதாகவும், அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவமே இதற்குச் சிறந்த உதாரணம் என்றும் ஹர்ஷண நாணயக்கார வலியுறுத்தினார்.
இவ்வாறான சம்பவங்களை எதிர்கொள்வதற்காகத் தேவையான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ளன.
அரச இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வெளியாவதில் ஏற்படும் தாமதம் சிறைச்சாலை நெரிசலுக்குக் கடுமையாகப் பாதிப்பை ஏற்படுத்துவதால், திணைக்களத்தின் திறனை அதிகரிப்பதற்குத் தேவையான மனிதவளம் உள்ளிட்ட வசதிகளை வழங்கி அந்த நிறுவனத்தைப் பலப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று, சிறைச்சாலை திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு உள்ள பிரச்சினைகள் மற்றும் தேவையான வசதிகளை வழங்குவதற்கும் அரசாங்கம் தற்போது தலையிட்டு வருகிறது.
சிறைச்சாலை நெரிசலைக் குறைப்பதற்காகத் தேவையான சட்டத் திருத்தங்கள் மற்றும் வீட்டுக்காவல் (House Arrest) போன்ற தொழில்நுட்ப முறைகளை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர், சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளார்.