இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க பிரதமர் ரணில் வழங்கிய ஆலோசனை!
இந்திய சுற்றுலாப் பயணிகளை கவர்வதை இலக்காகக் கொண்டு பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சுற்றுலாத்துறை அதிகாரிகளுடன் இன்று செவ்வாய்கிழமை (14-06-2022) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை அடுத்த வருடத்தில் 8 இலட்சம் சுற்றுலாத்துறையினரை நாட்டுக்கு வரவழைப்பதற்கு எதிர்பார்ப்பதோடு, அதன் மூலம் 800 மில்லியன் டொலர் வருமானம் கிடைக்கப் பெறக் கூடும் மதிப்பிடப்பட்டுள்ளதாக இதன் போது தெரிவித்தது.
எதிர்வரும் 6 மாதங்களுக்கு இந்தியாவிலிருந்து சுற்றுலாப்பயணிகளை அழைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கியுள்ளார்.
மேலும், பலாலி விமான நிலையத்தின் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
3.5 பில்லியன் டொலர் வருமானத்தை எதிர்பார்க்கும் இலங்கையானது 2025 ஆம் ஆண்டளவில் சுமார் 2.5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் என நம்பப்படுகிறது.
1.5 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை ஈர்ப்பதற்கான நீண்ட கால வேலைத்திட்டங்களை வகுக்குமாறும் பிரதமர் இதன் போது ஆலோசனை வழங்கினார்.
அதற்கான கூட்டங்கள், மேம்பாடுகள், மாநாடுகள் மற்றும் காட்சிப்படுத்தல்களை முன்னெடுக்குமாறும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுலாத்துறையில் உள்ள பல ஊழியர்கள் ஏற்கனவே வேறு இடங்களுக்கு சென்றுவிட்டனர். நாட்டில் ஹோட்டல் தொடர்பான பயிற்சி நிலையங்களுக்கு புதிதாக ஆட்சேர்ப்பு செய்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதால் இளைஞர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அமைக்குமாறு சம்பந்தப்பட்ட துறையினருக்கு பிரதமர் அறிவுறுத்தினார்.
தொழில்துறையில் நுழைவதற்கும் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உள்ளுர் கலாச்சாரங்களில் மூழ்குவதற்கும் ஆர்வமுள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு தனித்துவமான வாய்ப்பை வழங்கும் கலாச்சார விழாக்களை ஏற்பாடு செய்யுமாறு அதிகாரிகளுக்கு பிரதமர் மேலும் அறிவுறுத்தினார்.
உலகெங்கிலும் உள்ள அதிகமான எழுத்தாளர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்களை ஈர்க்கும் வகையில் காலி இலக்கிய விழாவை மேம்படுத்துவதற்கு பொதுத்துறை சுற்றுலாத்துறை அதிகாரிகள் பாடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியமை குறிப்பிடத்தக்கது.