எரிபொருள் இறக்குமதி தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசேட தீர்மானம்!
கச்சா எண்ணெயை ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் பெறுவதற்கு இலங்கை பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.
இந்திய செய்திச் சேவைக்கு அளித்த பேட்டி ஒன்றில் அலி சப்ரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அளித்த பேட்டியில்,
ரஷ்ய கச்சா எண்ணெயை நேரடியாக ரஷ்யாவிலிருந்தோ அல்லது இந்தியா மூலமாகவோ பெறுவதில் கவனம் செலுத்தப்படுவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர்,
"உக்ரைன் போரினால் நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம் என்பது இரகசியமல்ல. ஆனால் எதிர்காலத்தில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை பெற முடிந்தால் அதற்காக பாடுபடுவோம்.
தற்போதைய எண்ணெய் விலையை எங்களால் தாங்க முடியாது. நமது ஜனாதிபதி ஒருமுறை கூறியது போல், பெரிய நாடுகளுக்கு இடையே நடக்கும் மோதல்களில் நம்மைப் போன்ற சிறிய நாடுகள்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றன.
அதன்படி ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கிடைத்தால், சர்வதேச சட்டங்கள், நெறிமுறைகள் மீறப்படாவிட்டால், கண்டிப்பாக ரஷ்யாவுடன் இணைந்து செயல்படுவோம். ரஷ்யாவுடன் எங்களுக்கு நல்ல நீண்ட கால உறவு இருக்கிறது.
ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு கச்சா எண்ணெயை பெற்றுக் கொள்வது மற்றைய நாடுகளுக்கு பிரச்சினையாக இருக்காது என எதிர்ப்பார்கிறேன். ரஷ்யாவின் எண்ணெய் சந்தைக்கு வருவதை எவரும் தடுக்க விரும்பமாட்டார்கள்.