இரு முக்கிய பொறுப்பு: பிரதமர் ரணிலுக்கு இனி காத்திருக்கும் சவால்கள்!
இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) இனி நிதியமைச்சராக இரட்டைப் பொறுப்பை வகிப்பார் என்று ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கை கடுமையான நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பிணையெடுப்பு கோரும் போது சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று காலை (25-05-2022) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) முன்னிலையில் நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் என ஜனாதிபதி அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை ரொய்ட்டர்ஸுக்கு அளித்த செவ்வியில் பொருளாதாரத்திற்கான தனது உடனடித் திட்டங்களை வகுத்துள்ளதாகவும், ஆறு வாரங்களுக்குள் இடைக்கால வரவுசெலவுத் திட்டத்தை முன்வைக்கப்பக்க திட்டமிட்டுள்ளதாகவும் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டிருந்தார்.
22 மில்லியன் மக்கள் தொகை கொண்ட இலங்கை சுதந்திரத்திற்கு பின்னர் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
அந்நியச் செலாவணி பற்றாக்குறையால் எரிபொருள், மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் உட்பட இறக்குமதிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று, வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணம் அனுப்புதில் குறைவு, ராஜபக்ஷவின் வரிக் குறைப்புக்கள் ஆகியவை இலங்கை பொருளாதாரத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், போதுமான பொருளாதாரக் கொள்கை கட்டமைப்பை உருவாக்கும் வரை இலங்கைக்கு புதிய நிதியுதவி வழங்கத் திட்டமிடவில்லை என்று உலக வங்கி நேற்று அறிவித்துள்ளது.
நாட்டிற்குள் புதிய முதலீடுகளை ஈர்க்கும் கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் அதே வேளையில், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து ஒரு நிலையான கடன் பொதியை தான் எதிர்பார்க்கிறேன் என்று விக்ரமசிங்க செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் உடனான ஆரம்ப கட்ட கலந்துரையாடல்கள் செவ்வாய்க்கிழமை முடிவடைந்தன. 73 வயதான விக்ரமசிங்க, தற்போதைய நியமனத்திற்கு முன்னர் ஐந்து முறை பிரதமராக இருந்த ஒரு மூத்த அரசியல்வாதி ஆவார்.
இலங்கை கடைசியாக 2016 இல் அவர் பிரதமராக இருந்த காலத்தில் சர்வதேச நாணய நிதியம் திட்டத்தைக் கொண்டிருந்தது.
ரணில் பிராந்திய வல்லரசுகளான இந்தியா, சீனா, முக்கிய முதலீட்டாளர்கள் மற்றும் இலங்கையில் செல்வாக்கிற்காக போட்டியிடும் கடன் வழங்குபவர்களுடன் உறவுகளை கட்டியெழுப்பியுள்ளார்.
பிரச்சனை என்னவென்றால், ரணில் சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கான நிபந்தனைகளை பூர்த்தி செய்ய கொண்டு வரக்கூடிய எந்தவொரு பொருளாதார சீர்திருத்தங்களும் குறுகிய கால கடினம் மற்றும் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.
அண்மையில் அறிவிக்கப்பட்ட பெற்றோல் மற்றும் டீசல் விலை உயர்வு போக்குவரத்து மற்றும் உணவுப் பொருட்களின் விலையை மேலும் உயர்த்தியுள்ளது.
இலங்கையின் பணவீக்கம் ஏற்கனவே 33.8 சதவீதமாக உள்ள நிலையில், 40 சதவீதத்திற்கு மேல் செல்லலாம் என ரணில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியும் அவரது சக்தி வாய்ந்த குடும்பமும் பொருளாதாரத்தை தவறாகக் கையாண்டதாக தெரிவித்து மார்ச் மாதத்தின் பிற்பகுதியில் இருந்து இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்தன.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் அரசாங்க ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையிலான மோதல்கள் காரணமாக ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். சுமார் 300 பேர் காயமடைந்தனர்.
ஜனாதிபதியின் மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) வன்முறையை அடுத்து பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஆளும் கட்சி மற்றும் சில எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களை கொண்டு புதிய மந்திரி சபையை ஒன்றிணைக்க முயன்றனர்.
ஏப்ரலில் சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சு வார்த்தைகளை தொடங்கிய முந்தைய நிதியமைச்சர் அலி சப்ரி, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜினாமா செய்த பின்னர் அமைச்சரவை கலைக்கப்பட்ட போது மே மாத தொடக்கத்தில் பதவி விலகினார்.
நிதி அமைச்சரின் நியமனம் மிகவும் முக்கியமானது, ஏனெனில் அவர் புதிய வரவு செலவு திட்டத்தை முன்வைக்கும் அதேவேளை, சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் நிதி ஆதரவை முன்வைக்க வேண்டும் என இலங்கையை தளமாகக் கொண்ட முதலீட்டு நிறுவனமான Asia Securities இன் மேக்ரோ-பொருளாதார நிபுணர் லக்ஷினி பெர்னாண்டோ கூறியுள்ளார்.
ரணில் சிறந்த தெரிவு, ஆனால் அவருக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருக்கிறதா என்பதையும், பிரதமர் மற்றும் நிதியமைச்சரின் பணியை அவரால் செய்ய முடியுமா என்பதையும் நாம் பார்க்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.