கையிருப்பில் உள்ள அந்நியச் செலாவணி இவ்வளவுதான்; மத்திய வங்கி தகவல்!
ஏப்ரல் மாத இறுதியில் இலங்கையிடம் உத்தியோகபூர்வ கையிருப்பு 1,827 மில்லியன் அமெரிக்க டொலர் இருந்ததாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி ஈட்டிய அந்நியச் செலாவணித் தொகை 1,618 மில்லியன் அமெரிக்க டொலர் எனவும் அது தெரிவித்துள்ளது.
உத்தியோகபூர்வ கையிருப்பு மார்ச் மாதத்தில் 1,917 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது. அந்நிய செலாவணிக் கையிருப்பில் 1,702 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்தது.
எனினும், சீன மக்கள் வங்கியிலிருந்து பெறப்பட்ட 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் நாணய மாற்று வீத வசதியை உள்ளடக்கிய போதிலும், அதனைப் பயன்படுத்துவதில் நிபந்தனைகள் இருப்பதாக மத்திய வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது.
இதனால், ஏப்ரல் 2022 இறுதியில், இலங்கையின் பயன்படுத்தக்கூடிய அந்நிய செலாவணிக் கையிருப்பு 118 மில்லியன் டொலராகக் குறைந்துள்ளது.
அதேசமயம் நிதியமைச்சர் அலி சப்ரி, மே 4 ஆம் திகதி பாராளுமன்றத்தில் அந்நியச் செலாவணிக் கையிருப்பு 50 மில்லியன் டொலர் கூட இல்லை என்று கூறினார்.
உத்தியோகபூர்வ கையிருப்பில் உள்ள மற்றொரு முக்கிய சொத்தாக இருக்கும் தங்கம், ஏப்ரல் மாதத்தில் 29 மில்லியன் டொலராக மாறாமல் இருந்த நிலையில் , மார்ச் 2022 இல், தங்கக் கையிருப்பு 70% குறைந்திருந்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.