புத்தாண்டு இரவில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் ; கொழும்பில் விசேட கண்காணிப்பு
புத்தாண்டுப் பிறப்பை முன்னிட்டு நாடு தழுவிய ரீதியில் 8 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் சுமார் ஆயிரத்துக்கும் அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு நகரில் மாத்திரம் 700 மேற்பட்ட போக்குவரத்துப் பொலிஸார் பணியமர்த்தப்பட்டுள்ளளதாக போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிபாதுகாப்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் சேனாதீர தெரிவித்தார்.
புதன்கிழமை (31) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெளிவுபடுத்தினார்.
அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில், காலி முகத்திடல் மற்றும் கொழும்பின் முக்கியபல பகுதிகளில் மாலை 6 மணி முதல் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் நடைமுறைப்படுத்தப்படும்.

வாகன நெரிசல் அதிகரிக்கும் பட்சத்தில் கொம்பனித்தெரு, கொள்ளுப்பிட்டி மற்றும் காலி முகத்திடல் வீதிகளில் ஒருவழிப் போக்குவரத்து முறைமை பின்பற்றப்படும். கனரக வாகனங்கள் கொழும்பு நகருக்குள் நுழைவது மாலை முதல் தடைசெய்யப்படும்.
பொதுமக்களின் வசதிக்காக காலி முகத்திடலைச் சூழவுள்ள பகுதிகளில் சுமார் 4000 வாகனங்களை நிறுத்துவதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
மெரைன் டிரைவ், போர்ட் சிட்டி மற்றும் கொள்ளுப்பிட்டி பகுதிகளில் இதற்கான தரிப்பிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்துவதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கிறேன்.
இல்லையெனில் அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்கள் அப்புறப்படுத்தப்படும். குறிபாக காலி முகத்திடல் வீதியின் இருமருங்கிலும் வாகனங்களை நிறுத்துவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீறி நிறுத்தப்படும் வாகனங்களை கொண்டு செல்வதற்கு விசேட வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணிகளுக்காக நாடு முழுவதும் சுமார் 8 ஆயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், கொழும்பு நகரில் மாத்திரம் 700 க்கும் மேற்பட்ட போக்குவரத்துப் பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களைக் கண்டறிய 75 ஆயிரம் நவீன சுவாசப் பரிசோதனைக் (மதுசார பரிசோதனைக்) கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
போதைப்பொருள் பாவனையில் ஈடுபடுபவர்களைக் கண்டறிய விசேட சோதனைகள் முன்னெடுக்கப்பட உள்ளதுடன், அவ்வாறு கைதாகும் நபர்கள் சட்ட வைத்திய அதிகாரியின் முன் ஆஜர்ப்படுத்தப்படுவர்கள். மோட்டார் சைக்கிள்களில் வருவோர் தலைக்கவசம் அணிவது கட்டாயமாகும்.
அதிக சத்தமிடும் ஒலிப்பான்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும், வாகனங்களுக்கு வெளியே தலை அல்லது கைகளை நீட்டி ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டாம். கொண்டாட்டங்களின் போது சட்டத்தையும் ஒழுங்கையும் மதித்து, பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் வலியுறுத்துகிறேன் என்றார்.