ஓய்வூதிய கொடுப்பனவு தொடர்பில் ஓய்வூதியர்களின் ஊதிய முரண்பாடுகள் குறித்து ஆராய்வு
ஓய்வூதியர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய அமைப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்ணான்டோ மற்றும் தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க ஆகியோர் இடையே இன்று (29) விசேட சந்திப்பு ஒன்று நடைபெற்றது.
நிதி அமைச்சில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, ஓய்வூதியர்கள் எதிர்கொள்ளும் ஊதிய முரண்பாடுகள் குறித்து முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது, அரச ஊழியர்களின் ஊதிய உயர்வுடன் ஒப்பிடுகையில் ஓய்வூதிய சீர்திருத்தம், 2015 முதல் ஓய்வூதியம் பறிக்கப்பட்டமை,
மற்றும் 1997 ஆம் ஆண்டு பி.சி. பெரேரா ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மூலம் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் விரிவாக ஆலோசிக்கப்பட்டன.
தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க இது குறித்து கருத்து தெரிவிக்கையில்,
இந்த சந்திப்பு மிகவும் பயனுள்ள வகையில் முடிவடைந்ததாகவும், இலங்கையில் 7 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் எதிர்கொள்ளும் ஊதியப் பிரச்சினைகளைத் தீர்க்க அரசு உடனடியாக தலையிடும் எனவும் உறுதியளித்தார்.
இந்த பிரச்சினை தொடர்பாக மேலும் ஒரு சந்திப்பை 2025 மே 1 ஆம் திகதியன்று நடத்துவதற்கு இன்றைய சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
அந்த சந்திப்பில் அரச நிர்வாக அமைச்சு, நிதி அமைச்சு மற்றும் ஓய்வூதிய திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் பங்கேற்கவுள்ளனர்.