தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பாரிய விபத்து: சிறுமி உட்பட 5 பேர் வைத்தியசாலையில்!
தெற்கு அதிகவேக நெடுஞ்சாலையில் வேன் ஒன்று காருடன் மோதியதில் ஒரு சிறுமி உட்பட 5 பேர் காயமடைந்துள்ளதாக தெற்கு நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து சம்பவம் வெனிவெல்கொல பிரதேசத்தில் இன்றைய தினம் (07-05-2023) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் காயமடைந்தவர்களில் 08, 31, 39, 70 மற்றும் 72 வயதுடைய ஒரு ஆண், 3 பெண்கள் மற்றும் ஒரு சிறுமி அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதி சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடபில் மேலும் தெரியவருவதாவது,
மாத்தறை பிரதேசத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு வேனில் அத்தனகல்ல கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த போது மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த கார் வேனின் பின்பகுதியில் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வேன் மீது கார் மோதியதில், வேன் மூன்று முறை சுழன்று இடதுபுறம் இருந்த இரும்பு வேலியில் மோதி கவிழ்ந்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
வேன் வேலியில் மோதியதில், 8 வயது சிறுமி ஜன்னலுக்கு வெளியே தூக்கி வீசப்பட்ட நிலையில் மேலும் ஒரு பெண்ணும் வெளியே தூக்கி எறியப்பட்டதாக விபத்தை நேரில் பார்த்த வேனின் பின்னால் அதே திசையில் காரில் பயணித்தவர் தெரிவித்தார்.