தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டி ; மலையக வீரர்களின் சாதனை
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், பாத்திமா ஜின்னா பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்ற தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டியின் சிரேஷ்ட பிரிவில் இலங்கையின் விக்னராஜா வக்சன் தங்கப் பதக்கத்தையும் கனிஷ்ட பிரிவில் சிவாகரன் துதிஹர்ஷிதன் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
பாகிஸ்தானுக்கான இலங்கையின் பதில் தூதுவர் ரூபன் கிறிஸ்டி நேரடியாக போட்டி நடைபெற்ற இடத்திற்கு விஜயம் செய்து வெற்றிபெற்ற இலங்கை மெய்வல்லுநர்களைப் பாராட்டி கௌரவித்தார்.
10 கிலோ மீற்றர் தூரம் கொண்ட சிரேஷ்ட ஆண்களுக்கான நகர்வல ஓட்டப் போட்டியை 31 நிமிடங்கள், 56.38 செக்கன்களில் நிறைவு செய்து தலவாக்கொல்லையைச் சேர்ந்த இராணுவ வீரர் விக்னராஜா வக்சன் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
தலவாக்கொல்லை தமிழ் மகா வித்தியாலயத்தின் பழைய மாணவரான விக்னராஜா வக்சன், தான் பங்குபற்றிய முதலாவது சர்வதேச மெய்வல்லுநர் போட்டியிலேயே முதலாம் இடத்தைப் பெற்றது பாராட்டுக்குரியதாகும்.
அவர் கடந்த 6 வருடங்களுகாக இலங்கை இராணுவத்திற்காக தேசிய மெய்வல்லுநர் போட்டிகளில் பங்குபற்றி வருகிறார். இப் போட்டியில் பங்குபற்றிய இலங்கையின் தமித் ஹேமன்த குமார (33:24.90) 7ஆம் இடத்தையும் அபேரத்ன பண்டா (33:25.09) 8ஆம் இடத்தையும் பெற்றனர்.
சிரேஷ்ட ஆண்களுக்கான இப் போட்டியில் ஒட்டுமொத்த நிலையில் இலங்கை இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டது.
இதேவேளை 8 கிலோ மீற்றர் தூரம் கொண்ட கனிஷ்ட ஆண்களுக்கான நகர்வல ஓட்டப் போட்டியில் மாத்தளை இந்து தேசிய கல்லூரி மாணவன் சிவாகரன் துதிஹர்ஷிதன் இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
துதிஹர்ஷிதனும் தனது முதலாவது சர்வதேச முயற்சியிலேயே வெள்ளிப் பதக்கம் வென்றது குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய விடயமாகும்.
8 கிலோ மீற்றர் நகர்வல ஓட்டப் போட்டியை துதிஹர்ஷிதன் 27 நிமிடங்கள், 03.90 செக்கன்களில் நிறைவுசெய்து இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
அவருடன் பங்குபற்றிய கண்டி திகன இந்து தேசிய கல்லூரி மாணவன் ராஜேந்திரன் விதுசன் (27:28.20) 6ஆம் இடத்தையும் களுத்துறையைச் சேர்ந்த கவிந்து மதுஷான் (28:07.79) 8ஆம் இடத்தையும் பெற்றனர். அப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் முஸ்வார் அபாஸ் (26:55.88) முதலாம் இடத்தைப் பெற்றார்.
கனிஷ்ட ஆண்கள் பிரிவிலும் இலங்கை இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கிக்கொண்டது. தெற்காசிய நகர்வல ஓட்டப் போட்டியில் பங்களாதேஷ், மாலைதீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய ஐந்து நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்குபற்றினர்.