மகாவலி ஆறு பெருக்கெடுப்பால் நீரில் மூழ்கிய சோமாவதிய வீதி
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மகாவலி ஆறு பெருக்கெடுத்து வரலாற்றுச் சிறப்புமிக்க சோமாவதிய புனித பூமிக்குச் செல்லும் வீதி நீரில் மூழ்கியுள்ளது.
இதனால் சோமாவதிய வீதியினூடான போக்குவரத்து நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மகாவலி ஆற்றின் நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக ஆற்று நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

வாகனப் போக்குவரத்தை இடைநிறுத்த பொலிஸார் நடவடிக்கை
இதனால் சோமாவதிய - சுங்காவில வீதி நீரில் மூழ்கியுள்ளதையடுத்து, இன்று (07) காலை 8.30 மணி முதல் குறித்த வீதியிலான வாகனப் போக்குவரத்தை இடைநிறுத்த புலஸ்திபுர பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சோமாவதிய - சுங்காவில பிரதான வீதியானது திக்கல பகுதியில் சுமார் 2 அடி உயரத்திற்கு நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, நேற்று (06) மாலை வழிபாடுகளுக்காகச் சென்ற பக்தர்கள் சிலர் வெள்ளம் காரணமாகத் திரும்பி வர முடியாத நிலை ஏற்பட்டது.
வீதி நீரில் மூழ்கியிருந்ததால் சோமாவதிய விகாரைக்குச் சொந்தமான டிராக்டர் வண்டி மூலம் அவர்கள் பாதுகாப்பாகத் தாங்கள் வந்த பேருந்துக்கு அழைத்துச் செல்ல விகாரையின் பிக்குகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.