QR குறியீடு முறை தடைகளுக்கு தீர்வு ; பிரதி அமைச்சர் வெளியிட்ட கருத்து
மார்ச் 15 முதல் மீண்டும் செயல்படுத்தப்பட்ட தேசிய எரிபொருள் உரிம QR குறியீடு முறை தொடர்பான சில தொழில்நுட்ப தடைகள் தற்போது தீர்க்கப்பட்டுள்ளன என்று டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்கா வீரரத்ன தெரிவித்துள்ளார்.
வாகன உரிமை மாற்றங்கள், கைபேசி எண் மாற்றங்கள் போன்ற காரணங்களால் ஏற்பட்ட சிக்கல்கள் தற்போதைய நிலையில் அகற்றப்பட்டு, வாகனங்களை விற்றவர்கள் தங்கள் கணக்குகளில் இருந்து அந்த வாகனங்களை நீக்குவதற்கான வசதியும், புதிய வாகன பதிவுகளுக்கான நடவடிக்கைகளும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் இந்த விடயம் குறித்து அமைச்சர் தெரிவித்துள்ளதாவது, “அனைத்து தொழில்நுட்ப தடைகளும் இன்று காலைக்குள் (17) முழுமையாக அகற்றப்படும்.”
சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல்களை சந்திக்கும் பொதுமக்கள் தேவையற்ற பீதியின்றி திட்டத்தை ஆதரிக்குமாறு, வரிசைகள் மற்றும் முறையற்ற பதுக்கலை தவிர்க்குமாறு அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
புதிய திட்டம், மத்திய கிழக்கில் நிலவும் புவிசார் அரசியல் நெருக்கடி மற்றும் உலகளாவிய எரிபொருள் விநியோகச் சங்கிலி பாதிப்புகள் மற்றும் உள்நாட்டுத் தேவைகள் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.