பிரச்சினைக்கான தீர்வு தற்கொலை அல்ல ; பல்கலைக்கழக விரிவுரையாளரின் கூறும் கருத்து
பிரச்சினைக்கான தீர்வு தற்கொலை அல்ல. ஆனால் பிரச்சினைகளால் ஏற்பட்ட வலியை ,வேதனையை முடிவுக்கு கொண்டு வருவதற்காகவே அனேகமானவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர் என கொழும்பு MIU பல்கலைக்கழகத்தின் உளவியல்துறை விரிவுரையாளரும் உளசமூக செயற்பாட்டாளருமான திரு. S.பிரான்சிஸ் கருத்துத் தெரிவித்தார்.
வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்கு உட்பட்ட ஓர் பகுதியில் அண்மையில் (08.02.2025) இடம் பெற்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் தனது வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்த செயல் குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.
தற்கொலை தொடர்பில் அவர் கருத்து கூறுகையில், தற்கொலை எண்ணத்தில் இருக்கும் ஒருவர் மற்றவர்களிடம் உதவி கேட்காமல் இருக்கலாம் ஆனால் அவர் உதவியை விரும்பவில்லை என்பது அதற்கு அர்த்தமாகாது.
தற்கொலை செய்து கொண்டவர்களில் அனேகமானவர்கள் சாவதற்கு விரும்பி அதைச் செய்யவில்லை அவர்களின் வலி,வேதனைகளை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கிலே இடம்பெறுவதை உளபுலனாய்வு மூலம் அறிய முடிந்துள்ளது.
சாதாரணமாக ஒரு மனிதனுக்கு பிரச்சினை வரும்போது அதை எதிர்கொள்வது எவ்வாறு என்பது தெரிந்திருப்பதுடன் பிரச்சினை உருவாகின்றபோது கட்டாயமாக அதற்கான தீர்வும் உண்டு என்பதில் நம்பிக்கையும் வருதல் வேண்டும்.
ஆனால் பலருக்கு அத்தீர்வினை அடையாளம் காண்பது என்பது மிகவும் சிரமமாகவே உள்ளது.அவர்கள் தமது வாழ்வில் நல்ல முடிவுகளை எடுப்பதற்கு அவருக்குள் மறைந்திருக்கும் பலங்களை அடையாளம் காண்பதற்கு முடியாமையே பிரதான காரணமாகும்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
எமது மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்தவரையில் மனநலம் பாதிப்புற்று மருத்துவ சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளும், சாதாரண பிரச்சினைக்கு முகம் கொடுக்க முடியாதவர்களும் மேலும் உளவியல் தாக்கத்திற்கு உள்ளாகி தற்கொலை செய்து வருவதை அண்மைக்காலமாக அவதானிக்க முடிந்துள்ளது.
உண்மையில் 8.2.2025 அன்று வெல்லாவெளிப் பிரதேசத்தில் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் மனவேதனையானது.
எனவே தொடரும் இது போன்ற தற்கொலைச் சம்பவங்களை குறைப்பதாக இருந்தால் உளவியல் துறைசார்ந்த பொறுப்பு வாய்ந்த அரச அதிகாரிகள் அனைவரும் விழிப்புடனும் பொறுப்புடனும் சமூகமட்டத்தில் செயலாற்ற வேண்டிய கடமைப்பாடு உண்டு என்பதை என்னால் உணர முடிந்துள்ளது.
இதுவே மக்களின் எதிர்பார்ப்பும் ஆகும் என்றார். தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் ஒருவர் தற்கொலை செய்து கொள்கின்றார் என்றால் அதனை சாதார விடயமாக பார்த்துவிட்டு கடந்து செல்லும் நிலை மாறவேண்டும் தனது உயிரை ஒருவர் தற்கொலை செய்து மாய்த்துக்கொள்வதற்கு பிரதான காரணமாக இருக்கும் உளநல அறிவினையும் மக்கள் அறியாதிருக்கும் தற்கொலை தடுப்பு உத்திகளையும் சம்மந்தப்பட்ட தரப்பினர் சமூகத்தில் முன்னெடுப்பது சிறந்ததாகும்.
அத்துடன் தற்கொலை இடம் பெற்று வரும் குடும்பங்கள், பிரச்சினைகளை எதிர்கொள்வோர் குடும்பங்கள் போன்றோருக்கு உளவளத்துணையை மேற்கொளும் செயற்பாடுகளை முன்னெடுப்பது உள ஆரோக்கியமான மாவட்டத்தையும் நாட்டையும் உருவாக்கும் என அவர் மேலும் கருத்துத் தெரிவித்தார்.