சமூக ஊடகப் பதிவு விபரீதம் ; துபாயில் இருந்து மீண்டும் இலங்கையர்கள் வெளியேற்றம்
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரிலிருந்து மேலும் 09 இலங்கையர்கள் விரைவில் நாடுகடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
துபாயில் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான காணொளிகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்தமை காரணமாகவே அவர்களுக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறித்த சேதங்கள், ஈரான் மேற்கொண்டதாகக் கூறப்படும் ஏவுகணைத் தாக்குதல்களுடன் தொடர்புடையவை என தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இலங்கையர்கள் துபாய் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதுடன், அவர்கள் தற்போது அந்நாட்டில் சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் நோக்கில் துபாய்க்குச் சென்றிருந்த இலங்கையர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.
இதற்கிடையில், அரசின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதப்பட்ட காணொளிகளை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், துபாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மேலும் 26 இலங்கையர்கள் ஏற்கனவே இரண்டு கட்டங்களாக இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.