கனடா வாழ் தமிழ் சமூகத்திற்கு பெரும் அதிர்ச்சி ; 18 முறை கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட சமூக ஊடகப் பிரபலம்
கனடாவின் ஒன்ரோறியோ மாநிலத்திலுள்ள லசால் பகுதியில், சீக்கிய சமூக ஊடகப் பிரபலமான 45 வயதுடைய நான்சி கிரேவால் மர்ம நபர்களால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சம்பவம் கனடா வாழ் இந்திய சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மார்ச் 3ஆம் திகதி, நோயாளிகளைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த நான்சி, நோயாளி ஒருவரின் வீட்டிற்கு வெளியே வைத்து இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலில் இருந்து தப்பிக்க அவர் வீட்டிற்குள் நுழைய முயன்ற போதிலும், கதவு பூட்டப்பட்டிருந்ததால் அவரால் உள்ளே செல்ல முடியாமல் போயுள்ளது.

இதன்போது இருவர் அவரைப் பிடித்து 18 முறை கூரிய ஆயுதத்தால் தாக்கியதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் காலிஸ்தான் தீவிரவாதத்திற்கு எதிராகத் தீவிரமாகப் பேசிவந்த நான்சிக்கு, நீண்டகாலமாகவே கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
"அவர்கள் என்னைக் கொல்லப் போவதாகக் கூறும்போது, 'சரி, எப்போது வேண்டுமானாலும் என்னைக் கொல்லுங்கள்' என்று நான் பதிலளிப்பேன்" என அவர் தனது மரணத்திற்குச் சில நாட்களுக்கு முன்னர் வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, கடந்த நவம்பர் மாதம் நான்சியின் வீட்டிற்கு மர்ம நபர் ஒருவர் தீ வைத்த காட்சிகள் பாதுகாப்பு கெமராவில் பதிவாகியிருந்தன.
இது குறித்து அவர் காவல்துறையிடம் முறைப்பாடுகளை அளித்திருந்த போதிலும், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்தியாவில் தொழில்முறைப் பாடகியாக இருந்து 2018இல் கனடாவிற்கு குடிபெயர்ந்த நான்சிக்கு, அங்கு முதியோர் பராமரிப்பு நிறுவனமொன்றை ஆரம்பிக்க வேண்டும் என்பதே கனவாக இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது இக்கொலைச் சம்பவம் ஒரு திட்டமிட்ட இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல் என லசால் காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நான்சியின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பதற்காக இந்தியாவில் இருக்கும் அவரது குடும்பத்தினர் தற்போது அவசர விசா கோரி விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.