இலங்கைக்கு விமான மூலம் போதைப்பொருள் கடத்தல் ; இளைஞர் கைது
விமான தபால் சேவை மூலம் அனுப்பப்பட்ட பொதியொன்றிலிருந்து குஷ் மற்றும் கொக்கேன் போதைப்பொருட்கள் இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த பொதியானது பிரித்தானியாவிலிருந்து கிரிபத்கொடை பிரதேசத்தில் உள்ள முகவரி ஒன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட பல மில்லியன் பெறுமதியான போதைப்பொருட்கள்
சம்பவம் தொடர்பில் ராகம பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பொதியிலிருந்து 65 கிராம் குஷ் போதைப்பொருளும், 500 மில்லிலீற்றர் கொக்கேன் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் , அவற்றின் மொத்த பெறுமதி 13 மில்லியன் ரூபாய் ஆகும்.
இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே இந்த போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், விமான தபால் சேவை மூலம் அனுப்பப்பட்ட திரவ வடிவில் கொக்கேன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டமை இதுவே முதல் முறை என்றும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.