இலங்கையில் அதிகரிக்கும் சிங்களவர்கள் - குறையும் தமிழர்கள்; வெளியான புள்ளி விவரம்!
இலங்கையில் பூர்விகமாக வாழ கூடிய இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து கொண்டே வருவதாக புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் பூர்விக தமிழர்கள், மலையக தமிழர்கள், தமிழ் பேசும் இஸ்லாமியர்கள் உள்ளிட்ட 3 வகையான தமிழர்கள் இருந்து வருகின்றனர்.
திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களில் தமிழர்கள் சிறுபான்மையினராகிவிட்டது புள்ளிவிவரங்களில் அம்பலமாகியுள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு உள்நாட்டு போர் முடிவடைந்து கிட்டதட்ட 14 ஆண்டுகள் ஆகின்றது. 14 ஆண்டுகளில் தமிழர்களுக்கான உரிமை அவர்களது மறுவாழ்வு இவையெல்லாம் கேள்வி குறியாக இருக்கும் சூழ்நிலையில் தமிழர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.
குறிப்பாக இனப்பிரச்சனையால் நேரிட்ட போர், உயிரிழப்புகள், இடம்பெயர்தல், அகதிகளாக வெளியேறுதல் உள்ளிட்டவற்றால் தமிழர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது. மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களின் எண்ணிக்கையானது வெகுவாக குறைந்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் சிங்களவர், இஸ்லாமியர்களுக்கு அடுத்தப்படியாக 3வது இடத்துக்கு சென்றுள்ளது தமிழக மக்கள் தொகை என தெரியவந்துள்ளது.
புள்ளி விவரங்கள் மூலம் அம்பலம்
இலங்கை அரசு வெளியிட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் மூலம் இத்தகைய தகவல் தெரியவந்துள்ளது.
1881 ஆம் ஆண்டு 24.9 சதவீதமாக இருந்த இலங்கை தமிழர்கள் எண்ணிக்கை 2012 ல் 11.2 சதவீதமாக சரிந்துள்ளது. 1881 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது தமிழர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துவிட்டது.
திருகோணமலையில் 1881 ஆம் ஆண்டு 64.8 சதவீதமாக இருந்த தமிழர்கள் எண்ணிக்கை 2012ல் 32.3 சதவீதமாக குறைந்துள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் 1963 ஆம் ஆண்டு 28.8 சதவீதமாக இருந்த தமிழர்களின் எண்ணிக்கை 2012ல் 17.4 சதவீதமாக சரிந்துள்ளது.
1981 ஆம் ஆண்டு சிங்களவர் எண்ணிக்கை 74 சதவீதமாக இருந்த நிலையில் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 12.6 சதவீதமாக இருந்தது. 2012 ஆம் ஆண்டு சிங்களவர் எண்ணிக்கை 74.9 சதவீதமாக அதிகரித்துள்ள நிலையில் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 11.2 சதவீதமாக குறைந்துள்ளது.
கிழக்கு மாகாணத்தில் 1981 ஆம் ஆண்டு சிங்களவர் எண்ணிக்கை 24.9 சதவீதமாக இருந்த நிலையில் இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 42.1 சதவீதமாக இருந்தது. 2012 ஆம் ஆண்டு சிங்களவர் எண்ணிக்கை 23.1 சதவீதமாக இருக்கும் நிலையில், இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 39.8 சதவீதமாக குறைந்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் சிங்களவர் எண்ணிக்கை 1981 ஆம் ஆண்டு 33.6 சதவீதமாக இருந்த நிலையில் இலங்கை தமிழிர்களின் எண்ணிக்கை 36.4 சதவீதமாக இருந்தது.
2012 ஆம் ஆண்டு சிங்களவர் எண்ணிக்கை 27 சதவீதமாக இருந்த நிலையில், இலங்கை தமிழர்களின் எண்ணிக்கை 32.3 சதவீதமாக உள்ளது.
அம்பாறை மாவட்டத்தில் 1981 ஆம் ஆண்டு சிங்களவர் எண்ணிக்கை 37.8 சதவீதமாக இருந்த நிலையில், தமிழர்களின் எண்ணிக்கை 20.4 சதவீதமாக இருந்தது.
2012 ஆம் ஆண்டு சிங்களவர் எண்ணிக்கை 38.7 சதவீதமாக இருந்த நிலையில், தமிழர்களின் எண்ணிக்கை 17.4 சதவீதமாக குறைந்துள்ளது.