சிங்கப்பூரில் மதுபோதையில் பேருந்து சாரதியை தகாத வார்த்தையில் திட்டிய இந்தியருக்கு நேர்ந்த கதி!
சிங்கப்பூரில் பேருந்து ஒன்றில் இந்தியர் ஒருவர் மதுபோதையில் குறித்த பேருந்தின் சாரதியையும் சக பயணிகளையும் தகாத வார்த்தைகளில் தீட்டிய நிலையில் நீதிமன்றம் அவருக்கு சிறை தண்டனை விதித்துள்ளது.
சிங்கப்பூரில் உள்ள little India நகரில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த மூர்த்தி நாகப்பன் (65 வயது). இவர் கடந்த மார்ச் மாதம் 28ஆம் திகதி மதுபோதையில் பேருந்தில் ஏறினார். அப்போது அவர் முகக் கவசத்தை சரியாக அணியாமல் இருந்ததால் பேருந்தின் சாரதி அவரிடம் முறையாக முகக் கவசம் அணியும் படி அறிவுறுத்தினார்.
இதனால் கோபமடைந்த மூர்த்தி நாகப்பன் பேருந்து சாரதியை தகாத வார்த்தைகளில் திட்டினார். சக பயணிகள் இதை தட்டிக்கேட்டபோது அவர்களையும் கொச்சையாக திட்டி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இது தொடர்பில் பேருந்து சாரதி அளித்த முறைப்பாட்டின் பேரில் மூர்த்தி நாகப்பனை பொலிஸார் கைது செய்தனர். விசாரணையில் மூர்த்தி நாகப்பன் இதற்கு முன்னரும் 2 முறை இதே போல் மது போதையில் பஸ்சில் தகராறில் ஈடுபட்டுள்ளார் என்பதும், அப்போது அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதும் தெரியவந்தது.
இந்நிலையில் மூர்த்தி நாகப்பன் மீதான வழக்கு விசாரணை சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நேற்று முன்தினம் (27-12-2021) நடந்தது. அப்போது மூர்த்தி நாகப்பன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் நீதிபதி அவரை குற்றவாளியாக அறிவித்தார். இதனையடுத்து இந்த வழக்கில் அவருக்கு 5 வாரங்கள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.