யூதர்களின் நிகழ்வு ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு ; 10 பேர் பலி
அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபலமான பொண்டாய் கடற்கரைப் பகுதியில் யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என நம்பப்படும் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை அவுஸ்திரேலிய ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.
இந்தத் தாக்குதல் சனுக்கா (Chanukkah) எனப்படும் யூதர்களின் நிகழ்வொன்றை இலக்கு வைத்து நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதலாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.
குறித்த தாக்குதல் பல மாதங்களாகத் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், மற்றொருவர் காவல்துறையினரின் காவலில் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் துயரச் சம்பவத்தையடுத்து பொண்டாய் கடற்கரைப் பகுதிக்கு மக்கள் வர வேண்டாம் என காவல்துறை தொடர்ந்து எச்சரித்துள்ளது.
அத்துடன் துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரிகள் இருவர் அடையாளங் காணப்பட்டுள்ளதுடன் அதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களில் ஒருவர் சிட்னியின் தென்மேற்கில் உள்ள பொன்னிரிக்கைச் (Bonnyrigg) சேர்ந்த நவீத் அக்ரம் என அந்நாட்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
துப்பாக்கிதாரியின் இல்லத்தில் தற்போது காவல்துறையினர் சோதனை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு துப்பாக்கிதாரி ஏற்கனவே உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் இரண்டாவது துப்பாக்கிதாரி கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக அந்நாட்டுக் காவல்துறையினர் கூறுகின்றனர்.