அமெரிக்க அரசியலில் அதிர்ச்சி ; டொனால்ட் ட்ரம்ப் மீது அதிரடி கோரிக்கை
ஈரான் விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள கடும் எச்சரிக்கையைத் தொடர்ந்து, அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கை அமெரிக்க அரசியலில் வலுப்பெற்றுள்ளது.
இதற்காக அமெரிக்க அரசியலமைப்பின் 25-வது திருத்தச் சட்டத்தைப் (25th Amendment) பயன்படுத்துமாறு ஜனநாயகக் கட்சியினர் வலியுறுத்தி வருவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்க அரசியலமைப்பின்படி, ஒரு ஜனாதிபதி தனது கடமைகளை நிறைவேற்ற முடியாத நிலையில் இருந்தால், அந்த பொறுப்புகளைத் துணை ஜனாதிபதி பொறுப்பேற்க இந்த சட்டம் வழிவகை செய்கிறது.

குறிப்பாக, இதன் 4-வது பிரிவின் கீழ், ஜனாதிபதி தனது இயலாமையை ஒப்புக் கொள்ளாத பட்சத்தில், துணை ஜனாதிபதியும் அமைச்சரவையின் பெரும்பான்மையினரும் இணைந்து ஜனாதிபதி தகுதியற்றவர் என அறிவிக்க முடியும்.
டொனால்ட் ட்ரம்ப் "இனப்படுகொலை போர் குற்றங்களில் ஈடுபடப் போவதாக அச்சுறுத்துகிறார்" என்றும், "அணு ஆயுதக் குறியீடுகளை (Nuclear Codes) வைத்திருப்பதற்கு அவர் மிகவும் ஆபத்தானவர்" என்றும் பல ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
முக்கியமாக, காங்கிரஸ் உறுப்பினர் அலெக்ஸாண்ட்ரியா ஒகாசியோ-கோர்டெஸ் (AOC) சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இது ஒரு இனப்படுகொலை அச்சுறுத்தல், எனவே அவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்.
ஜனாதிபதியின் மனநிலை சிதைந்து வருகிறது, அவரை நம்ப முடியாது," எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, டொனால்ட் ட்ரம்ப் நாட்டை மூன்றாம் உலகப்போருக்குள் தள்ளுவதற்கு முன்னதாக, மத்திய கிழக்கில் முன்னெடுக்கப்படும் இந்த "ஆபத்தான போரை" நிறுத்த குடியரசுக் கட்சியினரும் தங்களோடு இணைய வேண்டும் என மூத்த ஜனநாயகக் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
ஜனாதிபதியின் தற்போதைய செயல்பாடுகள் "மனநிலை பிறழ்ந்தவை" (Unhinged) என்றும் அவர்கள் விமர்சித்துள்ளனர்.
இருப்பினும், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) அல்லது அமைச்சரவை உறுப்பினர்கள் எவரும் இவ்வாறானதொரு நடவடிக்கையை எடுப்பதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை.
அமெரிக்க பிரதிநிதிகள் சபை தற்போது விடுமுறையில் உள்ள நிலையில், எதிர்வரும் ஏப்ரல் 14-ஆம் திகதியே மீண்டும் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.