நாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பல நீதிவான்கள் ; அதிகரிக்கும் குற்றச்சாட்டுகள்
நாட்டிலுள்ள சுமார் 30 நீதிவான்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலித்து வருவதாக நீதிச் சேவை ஆணைக்குழுவைக் கோடிட்டு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நீதிபதிகள் பணியிடை நீக்கம்
கடந்த வாரத்தில் மாத்திரம் ஐந்து மாவட்ட நீதிபதிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மொரட்டுவை மாவட்ட நீதிபதி திலின கமகே மற்றும் மொனராகலை மாவட்ட மேலதிக நீதிபதி ரஞ்சனி கமகே ஆகியோரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பணி நீக்கப்பட்டுள்ள ஏனைய மூன்று நீதிபதிகளும் அண்மையில் நீதிச் சேவையில் இணைக்கப்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
அவர்களில் ஒருவர் தேர்தலில் போட்டியிட்டதாகவும், ஆனால், அவர் இந்த சேவையில் நியமிக்கப்படுவதற்கு முன்னர் குறித்த விடயத்தைத் தெரிவிக்கவில்லை எனவும் நீதிச் சேவை ஆணைக்குழு அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், தற்போது பெறப்பட்டுள்ள முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் நீதிச் சேவைகள் ஆணைக்குழு அலுவலகம் கூறியுள்ளது.