மாணவர்களை மேலதிக வகுப்புகளுக்கு அனுப்ப வேண்டாம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை
பிள்ளைகளை மேலதிக வகுப்புக்களுக்கு (Tuition Classes) அனுப்புவதைத் தவிர்க்குமாறு தெனியாய கல்வி வலய மாணவர்களின் பெற்றோர்களிடம் விசேட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
மாத்தறை - தெனியாய கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலை மாணவர்களிடையே பரவி வரும் காய்ச்சல் நிலைமையைக் கருத்திற் கொண்டு, ஏற்கனவே தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நான்கு பிரதான பாடசாலைகளையும் இன்று (11) மற்றும் நாளை ஆகிய இரு தினங்களுக்கும் தொடர்ந்தும் மூடுவதற்கு சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

இதற்கமைய தெனியாய மத்திய கல்லூரி, தெனியாய ராஜபக்ஷ மகா வித்தியாலயம், தெனியாய புனித மத்தியூ வித்தியாலயம் மற்றும் பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் மூடப்படவுள்ளன.
இந்த காலப்பகுதியில் காய்ச்சல் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமது பிள்ளைகளை மேலதிக வகுப்புக்களுக்கு அனுப்புவதைத் தவிர்க்குமாறு தெனியாய கல்வி வலய மாணவர்களின் பெற்றோர்களிடம் சுகாதார அதிகாரிகள் விசேட கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை, குறித்த காய்ச்சல் நிலைமை தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுப்பதற்காகக் கொழும்பிலிருந்து சென்றுள்ள விசேட மருத்துவக் குழுவினர், தெனியாய பகுதியில் தமது முதற்கட்டப் பரிசோதனைகளை தற்போது ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.