அனைத்து பாடசாலைகளும் மீண்டும் திறப்பு ; முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்
2026 ஆம் கல்வி ஆண்டின் முதலாம் பாடசாலைத் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று (21) முதல் ஆரம்பமாகிறது.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று முதல் பெப்ரவரி 13 ஆம் திகதி வரை நடைபெறும்.

முதலாம் பாடசாலைத் தவணையின் முதலாம் கட்டம் ஜனவரி மாதம் 05 ஆம் திகதி முதல் 09 ஆம் திகதி வரை இடம்பெற்ற நிலையில், டித்வா புயல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் காரணமாக, ஜனவரி 10 ஆம் திகதி முதல் நேற்று வரை பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை, 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் நடைபெறவுள்ளதால், எதிர்வரும் பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் மார்ச் 02 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு மீண்டும் விடுமுறை வழங்கப்படவுள்ளது.
மேலும், ரமழான் பண்டிகையை முன்னிட்டு முஸ்லிம் பாடசாலைகளுக்கு மாத்திரம் பெப்ரவரி 14 ஆம் திகதி முதல் மார்ச் 22 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.