அரச மருத்துவமனைகளுக்கு அதிநவீன சி.டி. ஸ்கேன் இயந்திரங்கள்
நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கில், அதிநவீன சி.டி. ஸ்கேன் இயந்திரங்கள் அரச மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும்,நாட்டின் பொது சுகாதாரத் துறையை நவீனமயமாக்கி, நோயாளர்களுக்கு உயர்தர மருத்துவச் சேவைகளை தடையின்றி வழங்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

சி.டி. ஸ்கேன் இயந்திரங்கள்
இதற்காக 1,950 மில்லியன் ரூபாய் (195 கோடி ரூபாய்) என்ற பெரும் நிதி ஒதுக்கீட்டில், 11 அதிநவீன சி.டி. ஸ்கேன் இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டு அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
அத்துடன்,இந்த இயந்திரங்களானது,பக்கவாதம், புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் உள்ளிட்ட தீவிர நோய்களைத் துல்லியமாகக் கண்டறிந்து, அவற்றுக்கான சிகிச்சைகளைத் தாமதமின்றி நோயாளர்களுக்கு வழங்குவதற்கு மிகவும் இன்றியமையாதவை என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ், முதற்கட்டமாக களுத்துறை மற்றும் குருநாகல் ஆகிய மாவட்ட பொது மருத்துவமனைகளில் இந்த அதிநவீன சி.டி. ஸ்கேன் இயந்திரங்கள் ஏற்கனவே பொருத்தப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதேவேளை, எஞ்சிய இயந்திரங்களும் திட்டமிடப்பட்ட ஏனைய மருத்துவமனைகளில் விரைவில் பொருத்தப்பட்டு, நோயாளர் பராமரிப்புச் சேவைகள் விரிவுபடுத்தப்படும் என சுகாதார அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.