விண்வெளியில் கவனம் செலுத்துவதைவிட பூமியை காப்பாற்றுங்கள்!
விண்வெளி சுற்றுலாவில் கவனம் செலுத்துவதைவிட, பூமியை காப்பாற்றும் பணிகளில் ஈடுபட வேண்டும் என இங்கிலாந்து இளவரசர் வில்லியம் (Prince William) வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து இங்கிலாந்து இளவரசர் வில்லியம் (Prince William) செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்,
உலகில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திறன் படைத்தவர்கள், மனித வாழ்வுக்கு மற்றொரு கிரகத்தை தேடாமல் நமது பூமியை மனிதர்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
உலக பணக்காரர்களில் ஒருவரும், அமேசான் நிறுவனத்தின் நிறுவனருமான ஜெப் பெசோஸ் (Jeff Bezos) புளூ ஆரிஜின் என்ற பெயரில் விண்வெளி நிறுவனம் நடத்தி வருகிறார்.
புளூ ஆரிஜின் நிறுவனத்தின் நியூ ஷெப்பர்ட் ராக்கெட் கடந்த ஜூலை மாதம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிலையில், ஜெப் பெசோஸ் (Jeff Bezos) அடங்கிய குழுவினர் வெற்றிகரமாக விண்ணுக்குச் சென்று திரும்பினர்.
இதைத்தொடர்ந்து, எலான் மஸ்கின் (Elon Musk) ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கடந்த மாதம் 4 பேரை விண்வெளி சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்று திரும்பியது. இந்நிலையில், விண்வெளி சுற்றுலாவில் கவனம் செலுத்துவதை நிறுத்திவிட்டு, பூமியைக் காப்பாற்றுவதற்கான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும் என இங்கிலாந்து இளவரசர் வில்லியம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த பெரும் பணக்காரர்களும், தொழிலதிபர்களும் விண்வெளி சுற்றுலாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில் இளவரசர் வில்லியம் (Prince William) இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.