பாடசாலை மாணவர்களுக்கு போதை குளிசை விற்பனை
பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதை குளிசைகளை விநியோகித்து வந்த சந்தேக நபர் தொடர்பில் கல்முனை விசேட அதிரடிப்படையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து புதன்கிழமை (25) இரவு காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாறை காரைதீவு பிரதான வீதியில் வைத்து சந்தேக நபர் 500 போதை குளிசைகளுடன் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதானார்.
இவ்வாறு கைதான நபர் அம்பாறை திசாபுர பகுதியைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்கவர் என்பதுடன், சந்தேக நபர் வசம் இருந்து 500 போதை குளிசைகள் உட்பட சந்தேக நபர் பாவித்த கைத்தொலைபேசி என்பன விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட சான்று பொருட்களுடன் காரைதீவு பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன், விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.