கட்டாரில் உயிரிழந்த இலங்கையர்களுக்கு ரூ. 80.8 மில்லியன் நஷ்டஈடு
2026ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில், கட்டாரில் உயிரிழந்த இலங்கைச் பிரஜைகளின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு நஷ்டஈடாக 80.8 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான தொகையை தோஹாவிலுள்ள இலங்கைத் தூதரகம் பெற்றுக்கொடுத்துள்ளது.
பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், ஜனவரி முதல் ஜூலை வரையிலான காலப்பகுதியில் தூதரகம் மொத்தம் 80,886,895.32 இலங்கை ரூபாவை மரண நஷ்டஈடாக மீட்டுள்ளது.

இந்த மொத்தத் தொகையில், தூதரகத்தின் முயற்சியால் 13,229,128 இலங்கை ரூபா நேரடியாக சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், எஞ்சிய 67,657,767.32 இலங்கை ரூபாய் உரிய பயன்பெறுநர்களுக்கு வழங்குவதற்காக, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சிடம் கையளிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த வழக்குகளின் நஷ்டஈட்டுத் தொகைகளும் இதில் அடங்குகின்றன.
கட்டாருக்கான இலங்கைத் தூதுவர் சிதாரா கான் மற்றும் அமைச்சர் தர்மசிரி விஜேவர்தன ஆகியோர் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு, கட்டார் அதிகாரிகள் மற்றும் தூதரகத்துடன் இணைந்து பணியாற்றும் சட்ட நிறுவனம் ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து இந்த நஷ்டஈட்டுத் தொகையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.
இதேவேளை, தூதரகம் 2025ஆம் ஆண்டில் மொத்தம் 197,719,710.36 இலங்கை ரூபாவை நஷ்டஈடாக மீட்டு, இலங்கையிலுள்ள வாரிசுகளுக்கு அத்தொகை வழங்கப்பட வழிவகை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.