நடவடிக்கை எடுக்காவிட்டால் நிறுத்தப்படும் அபாயம்!
கோதுமைமா விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த வாரம் முதல் சகல பேக்கரிகளும் உணவு உற்பத்திகளும் நிறுத்தப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
பேக்கரி உணவு உற்பத்திகளுக்கான சகல மூலப்பொருட்களின் விலைகள் பெருமளவு அதிகரித்துள்ளதால் சிறு மற்றும் மத்தியதர பாண் உற்பத்தி பேக்கரிகள் தமது உற்பத்திகளை முழுமையாக நிறுத்திவிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் 4 ஆயிரம் ரூபாவுக்கும் குறைந்த விலையில் விற்கப்பட்ட கோதுமை மா மூடையொன்றின் விலை தற்போது 12 ஆயிரம் ரூபாவாகவும் 37.5 எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலை 20 ஆயிரம் ரூபாவாக அதிகரித்துள்ளது எனவும் ஜெயவர்தன சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் கோதுமை மா தேவையில் 30 சதவீதத்தை விநியோகிக்கும் நிறுவனம் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 35 ரூபாவால் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே கோதுமை மாவின் விலை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.