வெளிநாட்டு சுற்றுலா பயணியை ஏமாற்றிய உணவக உரிமையாளர் இன்று நீதிமன்றுக்கு
வெளிநாட்டவர் ஒருவரை ஏமாற்றி 800 ரூபாவிற்கு வடை விற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் இன்று (2024.04.18) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இதற்காக அவரை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் உளுது வடை மற்றும் தேநீர் போன்றவற்றை வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவருக்கு 1000 ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்றுள்ளார்.
இதன் பின்னர் வெளிநாட்டு சுற்றுலா பயணி இது குறித்து கேள்வி எழுப்பிய போது சந்தேக நபர் அவரிடம் இருந்து 800 ரூபாவை பெற்றுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் அதிக விலைக்கு வடை விற்ற நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் களுத்துறை பகுதியை சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி எனவும் நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை, அதிக விலைக்கு வடை விற்பனை செய்த உணவகத்தின் உரிமையாளருக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகார சபை வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
பொருளின் விலையை காட்சிப்படுத்தாமை, ரசீது வழங்காமை மற்றும் நுகர்வோரை ஏமாற்றியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.