அம்பாறை பொதுச்சந்தையில் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகள் ; பொதுமக்களுக்கு அசௌகரியம்
கல்முனை மாநகர பொதுச்சந்தையில் காலை மாலை வேளைகளில் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்க்கு கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுக்கவேண்டும் என கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்க பிரதிச் செயலாளர் எஸ்.எல் றாயீஸ் தெரிவித்துள்ளார்.
கல்முனை மாநகர பொதுச் சந்தையில் ஏற்பாடு செய்த விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இவ்வாறு தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர மத்தியில் பட்டப்பகலில் கட்டாக்காலி மாடுகள் சுற்றித்திரிகின்றன.
இதனால் பிரதான வீதியில் பயணிக்கும் மக்கள் அசௌகரியங்களுக்குள்ளாவதுடன் வாகனங்களில் பயணிப்போர் விபத்துகளுக்கும் முகம் கொடுத்துவருகின்றனர்.
இது தவிர கல்முனையில் நடக்கும் வீதி விபத்துக்களில் இக்கட்டாக்காலி மாடுகளினாலும் அதிகமான விபத்துச் சம்பவங்கள் ஏற்பட்டுவருகின்றன.
குறிப்பாக கல்முனையில் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பொதுச்சந்தை நகரின் கடைத் தொகுதிகள் அமைந்துள்ள மத்திய பகுதிகள் பஸ்தரிப்பு நிலையம் வங்கிகள் பாடசாலைகள் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆகியவை அமைந்துள்ள பகுதிகளில் இம் மாடுகள் சுற்றித்திரிகின்றன.
கடந்த காலங்களில் கல்முனை மாநகர சபையினால் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்தும் திட்டம் கொண்டுவரப்பட்டபோதிலும் அவை முறையாக அமுல்படுத்தப்படவில்லை. எனவே கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்கான முறையான திட்டம் ஒன்றை வகுத்துச் செயற்படவேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கின்றனர்.
மேலும் பொதுச்சந்தையில் மாடுகள் தொல்லை தொடர்ச்சியாக உள்ளது.இந்த பிரச்சினைக்கு ஒரு நிரந்திர தீர்வு இதுவரை இல்லாமல் உள்ளது.
எமது பொதுச்சந்தையில் மக்களை விட மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இன்று கூட சந்தைக்கு பொருட்களை கொள்வனவு செய்ய வந்திருந்த பெண்மணிக்கு மாடு குத்தியதால் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
அதுமாத்திரமன்றி சந்தையில் மரக்கறிகளை உண்ண வந்த மாட்டினை துரத்துவதற்காக மரக்கறிக்காரர் தயாரான போது தன்னை காப்பாற்ற மாடு வீதியால் சென்ற பொதுமகனை மோதிய சம்பவமும் பதிவாகியுள்ளது.
இதனால் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்தவரும் காயமடைந்த நிலையில் மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தது. இதை விட ஒரு மாதத்திற்கு முன்னர் கர்ப்பிணி தாய் ஒருவருக்கு சந்தைப்பகுதியில் மாடுகள் குத்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட விடயமும் இருக்கின்றது.
இவ்வாறான தொடர்ச்சியாக சம்பவங்கள் மாடுகளினால் இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது. இது தொடர்பில் கல்முனை மாநகர ஆணையாளருக்கு பல தடவை அறிவித்திருக்கின்றோம்.
எவரும் இதில் உடனடி நடவடிக்கை எடுத்து நிரந்திர தீர்வினை பெற்றுத் தருவதாக தெரியவில்லை என ஆதங்கத்துடன் கல்முனை மாநகர பொதுச் சந்தை வர்த்தக சங்க செயலாளர் ஏ.எல். கபீர் தெரிவித்தார்.