மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றம்; ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவுக்கமைய, ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சுதந்திரமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்துவதற்காக மேலதிக தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்காவின் மத்திய கட்டளை மையம் (CENTCOM) தெரிவித்துள்ளமை மத்திய கிழக்கில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு ஈரானின் கடற்கரை பகுதிகளில் பல வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்த நிலையிலேயே, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஈரானால் முன்னெடுக்கப்பட்ட ஆக்கிரமிப்பு நடவடிக்கை
ஈரான் மீதான இந்தத் தாக்குதல்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க மத்திய கட்டளை மையம், அண்மைக்காலமாக ஈரானால் முன்னெடுக்கப்பட்ட 'நியாயமற்ற ஆக்கிரமிப்பு' நடவடிக்கைகளுக்கு அந்த நாட்டைப் பொறுப்புக்கூற வைக்கவே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது.
"முக்கிய சர்வதேச கடல்வழிப் பாதையில் சுதந்திரமாகப் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மற்றும் சிவில் பணியாளர்களுக்கு எதிராக ஈரான் மேற்கொண்ட நியாயமற்ற ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்காக, அந்த நாட்டை அமெரிக்கா பொறுப்புக்கூற வைக்கிறது" என அமெரிக்க மத்திய கட்டளை மையம் குறிப்பிட்டுள்ளது.
அதேசமயம் சிறிக் (Sirik), புஷேர் (Bushehr), கொனாரக் (Konarak) மற்றும் சபாஹர் (Chabahar) ஆகிய இடங்களில் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அவற்றைத்தொடர்ந்து பிராந்திய வான் பாதுகாப்பு அமைப்புகள் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக, ஈரான் அணு ஆயுதங்களைக் கைவிடாவிடில் எவ்வித ஒப்பந்தங்களும் இன்றி அந்த நாட்டை அணு ஆயுதமற்ற நாடாக மாற்றுவோம் என ட்ரம்ப் அச்சுறுத்தியிருந்தமையும், ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக அவர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஹோர்முஸ் நீரிணைப்பகுதியில் இரண்டு கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவமே, அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்ள காரணமாக அமைந்துள்ளதாக சர்வதீச ஊடகங்க்காள் சுட்டிக்காட்டியுள்ளன.