கடற்கரையில் இருந்து மீன் வாடி அகற்றம் ; பாதுகாப்பு திணைக்களம் அதிரடி செயல்
திருகோணமலை திருக்கடலூர் பகுதியில் கடற்கரை ஓரமாக கட்டப்பட்டிருந்த கட்டுமானம் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ திணைக்களத்தினால் இன்று (16) உடைத்து அகற்றப்பட்டது.
திருகோணமலை நீதவான் நீதிமன்றினால் கடந்த மாதம் 23 ஆம் திகதி குறித்த கட்டுமானத்தை அகற்றுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையிலேயே இன்றையதினம் (16) குறித்த மீன்வாடி அகற்றப்பட்டிருந்தது.
இதன்போது குறித்த திணைக்கள அதிகாரிகள், கிராம சேவகர், பொலிஸ் உத்தியோகத்தர்கள், மற்றும் மாநகரசபை ஊழியர்கள் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் சட்டப்படி கரையோர பிரதேசத்தில் இருந்து 300 மீற்றருக்குள் எந்தவிதமான கட்டுமான பணிகளை மேற்கொள்ளுவதாக இருந்தாலும் ஆணையாளர் நாயகத்தினுடைய அனுமதி பெறப்பட வேண்டும்.
அவ்வாறு அனுமதி பெறப்படாத கட்டடம் என்ற அடிப்படையில் குறித்த கட்டடத்தின் கட்டிடம் தொடங்குகின்ற நாளில் இருந்து பணிகள் நிறுத்தப்பட்டன.
அதையும் மீறி கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்ட குறித்த கட்டிடத்தை கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினுடைய சட்டத்தின் பிரகாரமும் 23.09.2025 அன்று நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளையின் பிரகாரமும் குறித்த சட்டவிரோத கட்டடம் அகற்றப்பட்டது.
அத்துடன் இது தொடர்பாக மக்களினால் பல முறைப்பாடுகளும் பிரதேச செயலகம் உட்பட திணைக்களங்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.
இலங்கையில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்கள் அகற்றப்படுகின்ற வேலைத் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளமையினால் இனிவரும் காலங்களில் அனுமதியைப் பெற்று கட்டடங்களை அமைக்குமாறும் பட்டிணமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குரிய கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் உத்தியோகத்தர் சுந்தரமூர்த்தி தீபராஜ் தெரிவித்தார்.
இது தொடர்பாக குறித்த கட்டட உரிமையாளர் மனோச் தெரிவிக்கையில், 2009இல் இருந்து குறித்த பகுதியில் தற்காலிக கொட்டில் அமைத்து பயன்படுத்தி வந்ததாகவும் 25க்கு மேற்பட்ட படகுகளின் பொருட்களை இங்கு பாதுகாத்து வந்ததாகவும் இதற்கான அனுமதியை வழங்கக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து திணைக்களங்களுக்கும் எழுத்து மூலமாக கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித பதிலுலோ மாற்று திட்டங்களோ வழங்கப்படாத நிலையில் குறித்த வாடியை இன்று (16) அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதானது இதை நம்பி தொழிலில் ஈடுபடுகின்ற 50க்கு மேற்பட்ட குடும்பங்களினது வாழ்வாதாரத்தை பாதிக்கும் எனவும் தொடர்ந்து தனது தொழிலை இங்கே நடத்துவதற்கு தற்காலிக கொட்டிலாவது அமைத்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.