வெற்றியோடு பிளே ஆஃப் சென்ற ஆர்சிபி ; சிஎஸ்கே ரசிகர்களுக்கு அதிர்ச்சி
பெங்களூரு சின்னச்சுவாமி மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான 68ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து பிளே ஆஃப் (play off) வாய்ப்பை இழந்துள்ளது.
இதில், முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் குவித்தது. இதில், அதிகபட்சமாக கேப்டன் ஃபாப் டூப்ளெசிஸ் 54 ரன்கள் எடுத்தோடு விராட் கோலி 47 ரன்கள் எடுத்துக் கொடுத்தார்.
பின்னர் கடின இலக்கை துரத்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கோல்டன் டக்கில் ஆட்டமிழந்தார். இதில், ஜடேஜா அதிரடியாக விளையாடினார்.
இந்தப் போட்டியில் சிஎஸ்கே 201 ரன்கள் எடுத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நிலையில் விளையாடி வந்தது.
இறுதியாக கடைசி ஓவரில் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்கு செல்ல 17 ரன்கள் தேவைப்பட்டது. யாஷ் தயாள் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் தோனி சிக்ஸர் அடித்த நிலையில் 2ஆவது பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ஷர்துல் தாக்கூர் 4ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். கடைசி 2 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஒரு ரன் கூட எடுக்கப்படவில்லை. இதன் மூலமாக சிஎஸ்கே 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் எடுத்து 27 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 4ஆவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. கடந்த ஆண்டு நடந்த சம்பவம் போன்று தான் இந்த போட்டியில் கடைசி ஓவரும் நடந்துள்ளது.
கடைசி 2 பந்தில் 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ரவீந்திர ஜடேஜா பேட்டிங், யாஷ் தயாள் பவுலிங். கடந்த சீசனில் 2 பந்தில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி அடித்து சிஎஸ்கே வெற்றி பெற்றது. ஆனால், இந்த சீசனில் இந்தப் போட்டியில் 2 பந்தில் ஒரு ரன் கூட அடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.