பிரிட்டன் பல்கலைக்கழகங்களில் இலங்கை அரசியல் சூடு ; ராஜபக்ச குடும்பத்திற்கு ஓக்ஸ்போர்டில் தடுப்பு
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ (Namal Rajapaksa) உடன் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பேச்சு நிகழ்வை ஒக்ஸ்போட் யூனியன் Oxford Union ரத்து செய்துள்ளது.
இதற்கு முன்னதாகவே Cambridge Union அவரின் வருகையை ரத்து செய்திருந்தது.
2026.02.23 அன்று கேம்பிரிட்ஜிலும், பின்னர் ஆக்ஸ்போர்டு யூனியனிலும் உரையாற்ற ராஜபக்ச திட்டமிடப்பட்டிருந்தார். எனினும், பிரிட்டனில் உள்ள பல தமிழ் மாணவர் அமைப்புகள் மற்றும் புலம்பெயர் தமிழ் குழுக்களின் கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) அவர்களின் மகனான நாமல் ராஜபக்ச, 2009 ஆம் ஆண்டு முடிவடைந்த இலங்கை உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டங்களில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களுடன் தொடர்புடைய அரசாங்கத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டி வருகின்றன.

தமிழ் மாணவர் குழுக்கள் வெளியிட்ட அறிக்கைகளில், போரின் இறுதிக்கட்டங்களில் பொதுமக்கள் மீதான தாக்குதல்கள், மருத்துவமனைகள் மீது குண்டுவீச்சு, கட்டாய காணாமல் போக்குகள் மற்றும் பாலியல் வன்முறை குறித்த குற்றச்சாட்டுகளை மேற்கோள் காட்டி, ராஜபக்சவிற்கு மேடை வழங்குவது பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அவமதிப்பாக அமையும் என தெரிவித்துள்ளனர்.
இந்த குற்றச்சாட்டுகள், 26 ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுப் போர் 2009 ஆம் ஆண்டு Liberation Tigers of Tamil Eelam (LTTE) தோல்வியுடன் முடிவடைந்த காலப்பகுதியைச் சுட்டிக்காட்டுகின்றன. அந்த காலகட்டத்தில் அரசாங்கப்படைகள் கடுமையான மீறல்கள் செய்ததாக ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
ஆக்ஸ்போர்டு யூனியன் தலைவர் கேத்தரின் யாங் வெளியிட்ட அறிக்கையில், “பாதிக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் நேரடியாகக் கேள்வி எழுப்புவதற்கு பாதுகாப்பாக இல்லை என்று தெரிவித்துள்ளனர்.
மாற்று ஏற்பாடுகள் பரிசீலிக்கப்பட்டாலும், சமமான பங்கேற்பு சாத்தியமில்லாத சூழலில் நிகழ்வை முன்னெடுக்க இயலாது” என்று கூறப்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜ் யூனியனும் “தற்போதைய சூழலில் சமநிலையான மற்றும் வெளிப்படையான விவாதம் நடத்த முடியாது” எனத் தெரிவித்துள்ளது.
மேலும், தங்கள் மேடைகள் எந்த பேச்சாளரையும் ஆதரிப்பதற்கானவை அல்ல என்றும் அவை விமர்சனமற்ற தளங்களாக செயல்படாது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு யூனியன், ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் அழைப்பை ரத்து செய்தது இதுவே முதல் முறை அல்ல. 2010 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ச உரையாற்றவிருந்த நிகழ்வும் பாதுகாப்பு காரணங்களால் ரத்து செய்யப்பட்டது. அதற்கு முன்னர் 2008 ஆம் ஆண்டிலும் அவரது வருகை தொடர்பாக சர்ச்சைகள் எழுந்திருந்தன.
இந்த ரத்துச் செயற்பாடுகள், கருத்துச் சுதந்திரம் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் உணர்வுகள் ஆகியவற்றுக்கு இடையிலான சமநிலையைப் பற்றிய விவாதத்தை மீண்டும் எழுப்பியுள்ளன. சமூக ஊடகங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் இந்த விவகாரம் தொடர்பாக பரவலான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.
நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டாலும், இலங்கை உள்நாட்டுப் போர் மற்றும் அதனுடன் தொடர்புடைய பொறுப்புக்கூறல் கேள்விகள் சர்வதேச அளவில் தொடர்ந்தும் விவாதப் பொருளாகவே உள்ளன.