நாட்டில் தொடருந்து சேவைகள் வழமைக்கு திரும்புவது தொடர்பில் நாடாளுமன்றில் அறிவிப்பு
நாட்டின் பல்வேறு பகுதிகளில் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்த தொடருந்து சேவைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான கால அட்டவணையைப் போக்குவரத்து பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இன்று நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.
அவரது அறிவிப்பின்படி தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்படும் திகதிகள் வருமாறு,
டிசம்பர் 20 முதல் பதுளை - அம்பேபுஸ்ஸ இடையிலான மலையக தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

ஜனவரி 1 முதல் தொடருந்து சேவைகள் வடக்கு மார்க்கமாக காங்கேசன்துறை வரை நீடிக்கப்படும். புத்தளம் தொடருந்து மார்க்கத்தின் சேவைகள் சிலாபம் வரை விரிவுபடுத்தப்படும்.
மட்டக்களப்பு தொடருந்து மார்க்கம் முழுமையாகத் திறக்கப்பட்டு தொடருந்து சேவைகள் வழமைக்குத் திரும்பும்.
பெப்ரவரி 1 முதல் மன்னார் மற்றும் தலைமன்னார் நோக்கிய தொடருந்து சேவைகள் முழுமையாக இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய அனர்த்தங்களால் தொடருந்து பாதைகளில் ஏற்பட்ட பாதிப்புகளைச் சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே இந்தச் சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.