QR குறியீடு சிக்கலா? ; புதிய வாகனப் பதிவு குறித்து அரசின் விசேட அறிவிப்பு
நாட்டில் இன்று முதல் அமுலுக்கு வந்துள்ள தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (Fuel QR) நடைமுறையில் நிலவும் நடைமுறைச் சிக்கல்களுக்குத் தீர்வுகாண அரசாங்கம் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
முன்னர் QR குறியீட்டைப் பெற்று, தற்போதும் அதே வாகனம் மற்றும் அதே தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்துபவர்கள் எவ்விதத் தடையுமின்றி தமது புதிய QR குறியீட்டை இணையதளத்தின் ஊடாக உடனடியாகப் புதுப்பித்துக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாகன உரிமையாளர்கள் அல்லது தொலைபேசி இலக்கங்கள் மாறியுள்ளவர்கள் மற்றும் புதிய வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்கள் எதிர்கொள்ளும் தொழில்நுட்ப ரீதியான சிக்கல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவற்றை மிக விரைவாகத் தீர்ப்பதற்கான விசேட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்தியாவசிய சேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் விநியோகத்தில் காணப்படும் விசேட தேவைகள் குறித்து இன்று (15) பிற்பகல் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.
மேலும், அத்தியாவசியத் தேவைகளுக்கான இறுதித் தீர்மானங்கள் இன்றைய தினத்திற்குள்ளேயே வழங்கப்படவுள்ளன. அத்துடன், பொதுமக்கள் இது குறித்து தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதேவேளை, உத்தியோகபூர்வ தகவல்களுக்கு https://fuelpass.gov.lk இணையத்தளத்தைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.