புத்தளத்தில் பரபரப்பு சம்பவம்: உருக்குலைந்த நிலையில் பெண் சடலமாக மீட்பு!
புத்தளத்தில் உள்ள கடற்கரையோரத்தில் உருக்குலைந்த நிலையில் பெண்ணொருவரின் சடலமொன்று கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று (03-10-2023) காலை உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்பாடு பிரதேசத்திலுள்ள கடற்கரையோரத்தில் இடம்பெற்றுள்ளது.
பள்ளிவாசல்பாடு பிரதேச மீனவர்கள் இன்று காலை கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக சென்றபோது சடலம் ஒன்று கரையொதுங்கி கிடப்பதை அவதானித்துள்ளனர்.
இதனையடுத்து மீனவர்கள் உடனடியாக உடப்பு பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த உடப்பு பொலிஸார் குறித்த சடலத்தின் முகம், கை, கால் மற்றும் தலைப் பகுதிகள் முழுமையாக உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவித்தனர்.
மேலும், குறித்த பெண் சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
குறித்த சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
மேலும், நீதிவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நீதிவான் விசாரனையை மேற்கொண்டதன் பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.