முல்லைத்தீவில் மாட்டினால் ஏற்பட்ட கோர விபத்து... இளைஞனுக்கு நேர்ந்த நிலை!
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு சந்திக்கு அண்மித்துள்ள பகுதியில் வீதியில் மாடு குறுக்கிட்டதனால் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து சம்பவம் இன்றையதினம் (24-06-2024) 5.30 மாலை புதுக்குடியிருப்பு சூசையப்பர் ஆலய சந்தியில் ஒட்டிசுட்டான் வீதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஒட்டிசுட்டான் பகுதியிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி வேகமாக சென்ற மோட்டார் சைக்கிளினை திடீரென மாடு ஒன்று குறுக்கிட்டு சென்றுள்ளது.
இதன்வேளை, வேக கட்டுபாட்டினை இழந்த இளைஞனின் மோட்டார் சைக்கிள் புதுக்குடியிருப்பில் இருந்து எதிரே ஒட்டிசுட்டான் நோக்கி சென்று கொண்டிருந்த காரின் மீது மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரத்தை சேர்ந்த 30 வயதுடைய இளைஞனே காயமடைந்து புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக புதுக்குடியிருப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து 250 மீற்றர் தூரத்தில் குறித்த மோட்டார் சைக்கிள் காணப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.