தமிழர் பகுதியில் பாடசாலை ஒன்றில் சமூகமளிக்காத மாணவர்களுக்கு அதிபர் கொடுத்த தண்டனை
கிளிநொச்சியில் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் நேற்று (27) பாடசாலைக்கு சமூகமளிக்காத காரணத்தினால் அதிபரால் தண்டிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
கிளிநொச்சி தருமபுரத்தில் உள்ள பிரபல பாடசாலையொன்றிலே இச் சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவிகள் இருவர் மதியம் வரை வகுப்பு அனுமதிக்கப்படாது இருந்துள்ளனர். இவ் விவகாரம் வலய கல்விப் பணிமனைக்கு சென்ற பின்னர், அதிகாரிகளின் தலையீட்டையடுத்தே மாணவிகள் இருவரும் வகுப்புக்கு அனுமதிக்கப்பட்டனர்.
சுற்றுலா பயணம்
பிரதேசத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனம் ஒன்றினால் கடந்த ஞாயிற்றுக்கிழமை திருகோணமலைக்கான ஒருநாள் சுற்றுலா பயணம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
பாடசாலைக்கு நேற்று முன்தினம் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவர்கள் சமூகமளித்திருக்கவில்லை.
பாடசாலைக்கு சமூகமளிக்காததற்கான காரணமாக, சுகயீனமென குறிப்பிட்டு கடிதமெழுதிக் கொண்டு ஒரு பகுதி மாணவர்கள் நேற்று பாடசாலைக்கு சமூகமளித்திருந்தனர்.
சமூகமளிக்காத மாணவர்கள் வகுப்புக்கு வெளியில் நிறுத்தப்பட்டு அதிபரால் அடித்து தண்டிக்கப்பட்டதாக பெற்றோர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அழுத்தம் கொடுத்த அதிபர்
அவர்களிடம் மாணவர்கள் எழுதி வந்த சுகயீன விடுப்பு கடிதத்தின் காரணம் தவறென்றும் குறிப்பிட்ட தனியார் கல்வி நிறுவனத்தை நடத்தபவரின் பெயரை குறிப்பிட்டு அவரால் சுற்றுலா அழைத்து சென்றதால் காய்ச்சல் ஏற்பட்டதாக கடிதம் எழுதி தருமாறு அதிபர் அழுத்தம் கொடுத்ததாக பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த தகவலை சில தனியார் கல்வி நிறுவனத்தை நடத்துபவர் அறிந்து பாடசாலைக்கு சென்று கலந்துரையாடியுள்ளனர்.
மாணவர்கள் தாக்கப்படுவதாக தகவலறிந்து பாடசாலைக்கு சென்ற பெற்றோர்கள் அதிபர் கேட்டபடி கடிதம் எழுதிக் கொடுக்காததால் 2 மாணவிகள் மதியம் வரை வகுப்பு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.