கொழும்பில் உயிரிழந்த மாணவிக்கு நீதிகோரி கொட்டும் மழையில் மாபெரும் போராட்டம்
கொழும்பு - கொட்டாஞ்சேனை பதினாறு வயதுடைய பாடசாலை மாணவியின் மரணத்திற்கு நீதிகோரி , கொழும்பில் இன்று காலை மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மாணவியின் மரணத்திற்கு நீதிகோரிய போராட்டத்தில் பெற்றோர்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.
மரணித்த சிறுமியின் வீட்டிற்கு பேரணி
இப்போராட்டம் கொழும்பு கொச்சிக்கடை விவேகானந்தர் மேட்டு சந்தியில் ஆரம்பமானது. இதைத்தொடர்ந்து இராஜேஸ்வரி கல்வி நிலையத்திற்கு பேரணியாக சென்று அங்கு தமது எதிர்ப்பை மக்கள் தெரிவித்தனர்.
அதன்பின் கொட்டாஞ்சேனை கல்பொத்தானையில் அமைந்துள்ள மரணித்த சிறுமியின் வீட்டிற்கு பேரணியாக சென்று அவ் விடத்திற்கு முன் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சம்பந்தப்பபட்ட அனைவருக்கும் தகவல்களை தெரிவிப்பதாக போராட்ட ஏற்பாட்டுக் குழுவினர் கருத்து தெரிவித்ததுடன், மாணவிக்கு ஆத்ம சாந்தி பிரார்த்தனையை வருகை தந்த அனைவரும் நிகழ்த்தினர்.
இதேவேளை மழையையும் பொருட்படுத்தாது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் பேராட்டம் இடம்பெற்ற பகுதிகளில் பொலிஸாரும் குவிக்கப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது.