ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை தனியார் மயமாக்க தீவிர முயற்சியில் அரசாங்கம்!
நாட்டின் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை தனியார் மயமாக்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தீவிரமாக ஆராய்ந்து பல்வேறு தனியார் நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இதற்காக சாத்தியமான முதலீட்டு நிறுவனங்களான எமிரேட்ஸ், டாடா சன்ஸ் மற்றும் அதானி குழுமம் போன்றவைகளுடன் பேச்சு வார்த்தைகள் இடம்பெற்று வருகின்றதாக கூறப்படுகிறது.
இந்தியா, பங்களாதேஷ் மற்றும் நேபாளத்திற்கான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பிராந்திய மேலாளர் வீரபெருமாள் இரவீந்திரன் ஊடகம் ஒன்றுக்கு அளித்த செவ்வியின்போது இந்தத் தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எதிர்வரும் குளிர்கால கால அட்டவணையின் போது கொழும்பு மற்றும் திருவனந்தபுரம் இடையிலான தனது சேவைகளை வாரத்திற்கு 6 தடவையிலிருந்து 7 தடவையாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை, கடந்த மாதங்களில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கான போக்குவரத்தில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கையின் நிலைமை படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்புவதால் அது சாத்தியமாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.