நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம் ; நீதி அமைச்சர் முன்னிலையில் கண்ணீர் மல்கிய சிறைச்சாலை அதிகாரிகள்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரத்தில் உயிரிழந்த சிறைச்சாலை அதிகாரிகளின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்ட நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார முன்னிலையில், சிறைச்சாலை அதிகாரிகள் தங்களது கவலைகளையும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலவரத்தில் 7 சிறைச்சாலை அதிகாரிகள் உட்பட மொத்தம் 27 பேர் உயிரிழந்திருந்தனர்.
உயிரிழந்த ஏழு சிறைச்சாலை அதிகாரிகளின் பூதவுடல்களுக்கு இறுதி மரியாதை செலுத்துவதற்காக இன்று (08) வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்றிருந்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவிடம், அதிகாரிகள் தங்களது குறைகளை முன்வைத்தனர்.

இந்தக் கலவரத்தை ஆரம்ப கட்டத்திலேயே கட்டுப்படுத்தியிருக்க முடியும் என தெரிவித்த அதிகாரிகள், அவசர நிலைமையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கான உரிய அதிகாரமும் உத்தரவுகளும் கிடைக்காததாலேயே நிலைமை பெரும் அழிவாக மாறியதாக தெரிவித்தனர்.
இதன்போது அதிகாரிகள், “நாங்கள் துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை ஐயா. துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கான அனுமதியை கேட்டோம். அந்த உத்தரவு எங்களுக்கு வழங்கப்பட்டிருந்தால் இந்த நிலைமையைத் தடுத்திருக்க முடியும்.
அவசர நிலைமைகளில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான அதிகாரத்தை எங்களுக்கு வழங்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர். சிறைச்சாலைகளில் உள்ள சில கைதிகள் மிகவும் ஆபத்தான தன்மையுடையவர்கள் என சுட்டிக்காட்டிய அதிகாரிகள், தங்களது பாதுகாப்பு மற்றும் பணிச்சூழல் தொடர்பான சவால்கள் குறித்தும் அமைச்சரிடம் விளக்கமளித்தனர்.

மேலும், கலவரம் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்பட்டிருக்க முடியும் என தெரிவித்த அவர்கள், “இதனை ஆரம்பத்திலேயே கிள்ளி எறிந்திருக்கலாம். சுமார் 1500 பேர் வரை வெளியே வந்திருந்தால் ஒட்டுமொத்த மக்களும் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
உயிரிழந்த அந்த அதிகாரிதான் அந்த நிலைமையைத் தடுத்து மக்களை காப்பாற்றினார்” என தெரிவித்தனர். இதன்போது கருத்து தெரிவித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம் தொடர்பாக அதிகபட்ச நீதி நிலைநாட்டப்படும் என உறுதியளித்தார்.
சிறைச்சாலை அதிகாரிகளின் பயிற்சிகள், பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அவர்களின் பணிப் பாதுகாப்பு தொடர்பில் புதிய அணுகுமுறையுடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், சம்பவம் தொடர்பாக முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, உண்மைகள் கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

