சுற்றுலாப்பயணிகள் குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தவேண்டும்
மிகவும் ஆபத்தான உருமாறிய சி.1.2. வைரஸ் காணப்படும் நாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருவதற்கு அனுமதிக்ககூடாது என இலங்கை ஆராய்ச்சி பேரவை வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கவனம் செலுத்த் வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வைரஸ் காணப்படும் தென்னாபிரிக்கா உட்பட பல நாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் இலங்கை வருவதற்கு ஜனாதிபதி தடைவிதிக்கவேண்டும் என இலங்கை ஆராய்ச்சி பேரவையின் தலைவர் ஹேமந்த தொடம்பகல கூறியுள்ளார்.
வெளிநாட்டு ஊடகங்களின்படி இந்த மாறுபாடு என்பது ஸ்பைக் புரதத்தின் சி.1.2 வரிசையில் திரட்டப்பட்ட பல பிறழ்வுகளின் விளைவாகும் என தெரிவித்துள்ள அவர் வுகானில் அடையாளம் காணப்பட்ட வைரசினை விட இது வித்தியாசமானது எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் 13 ம் திகதி வரை சீனா கொங்கோ மொறீசியஸ் நியுசிலாந்து போர்த்துக்கல் உட்பட பல நாடுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், புதிய கொவிட் மாறுபாடு தற்போதுள்ள அனைத்து மாறுபாடுகளையும் விட அதிக பிறழ்வுகளை கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
அத்துடன் இது அதிகளவு தொற்றும் தன்மையை கொண்டுள்ளது தடுப்பூசிகளால் வழங்கப்படும் பாதுகாப்பிலிருந்து இது தப்புகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்னாபிரிக்காவில் மே மாதம் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ் அந்த நாட்டில் மூன்றுவீதம் பரவியுள்ளதாகவும் இலங்கை ஆராய்ச்சி பேரவையின் தலைவர் ஹேமந்த தொடம்பகல கூறியுள்ளார்.
இந்தியாவிலிருந்து வந்த நபர் ஒருவர் காரணமாகவே தெமட்டகொடையில் டெல்டா வைரஸ் பரவத்தொடங்கியது என குறிப்பிட்டுள்ள ஹேமந்த தொடம்பகல, புதிய வைரஸ் காணப்படும் நாடுகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வருவதை தடுப்பது குறித்து ஜனாதிபதி கவனம் செலுத்தவேண்டும் எனவும் கோரியுள்ளார்.