இளைஞர்களின் ஆலோசனைகளை பெற திட்டம் தீட்டும் ஜனாதிபதி ரணில்!
சிங்கள கலாசார நிறுவனத்தின் அங்கத்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பதன் மூலம் படித்த இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி அவர்களின் ஆலோசகைகளை பெற்றுக்கொள்ள முடியுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil Wickremesinghe) ஆலோசானை வழங்கியுள்ளார்.
இன்றைய தினம் (30-01-2023) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சிங்கள கலாசார நிறுவனம் அமைந்துள்ள காணி தொடர்பில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வாறு ஆலோசனை வழங்கியிருந்தார்.
சிங்கள கலாசார நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்வது மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் மிகப் பொருத்தமான அமைச்சரவை பத்திரம் ஒன்றை தயாரித்து சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்கவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கையின் கலாசார அடையாளத்தைப் பாதுகாக்கும் சிங்கள கலாசார நிறுவனத்தின் செயற்பாடுகளைப் பேணுவதற்காக, கலாசார அமைச்சுக்கும் சிங்கள கலாசார நிறுவனத்திற்கும் இடையிலான ஒன்றிணைந்த குழுவொன்றை நியமிக்குமாறும் ஜனாதிபதி ரணில் ஆலோசனை வழங்கினார்.