ஜனாதிபதி ரணிலுக்கு அரசியல் தெளிவில்லை; நாமல் ராஜபக்ஷ!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கூட்டணி அரசியல் தொடர்பாக விளங்கிக் கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தபோதே நாமல் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பதவிகள் மாற்றமடைவதால் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது
கூட்டணி அரசாங்கமொன்றில், ஏதேனும் முக்கியமான தீர்மானமொன்று எடுக்க வேண்டுமாக இருந்தால் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசிக்கப்படும். ஆனால், கடந்த காலங்களில் பெரமுனவுடன் கலந்தாலோசிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு கட்சியின் செயலாளர் உள்ளிட்ட பலரால் முன்வைக்கப்பட்டுள்ளது.
பெரமுனவுக்கும் சுதந்திரக் கட்சிக்கும் இடையில் எந்தவித முரண்பாடும் கிடையாது எனினும், பதவிகள் மாற்றமடைவதால் மக்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடாது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு மட்டுமன்றி சஜித் பிரேமதாஸ, சரத்பொன்சேகா, அநுரகுமார திஸாநாயக்கவையும் அன்று நாம் அழைத்தோம். எனினும் அவர்கள் யாரும் வரவில்லை. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மட்டும்தான் இந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இதற்கான கௌரவத்தை நாம் அவருக்கு கொடுக்க வேண்டும். ஆனால், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூட்டணி அரசியல் தொடர்பாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தின்போதும் இரண்டு தலைவர்களும் வெவ்வேறாக செயற்பட்ட காரணத்தினால்தான் நாடு வீழ்ச்சியடைந்ததாக கூறிய நாமல் ராஜபக்ஷ,
தற்போதும் அவ்வாறு இடம்பெற்றுவிடக்கூடாது என்பதற்காகத் தான், பேசித் தீர்மானங்களை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கிறோம் எனவும் கூறினார்.