நெற்செய்கையை தயார்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை
தேசியத் தேவையாகக் கருதி, அநுராதபுரம் மாவட்டத்தில் உடனடியாகப் பெரும்போக நெற்செய்கையைத் தொடங்குவதற்கு தயாராகுமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனுராதபுரம் மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவது குறித்து நேற்று நடைபெற்ற விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன், பயிர்ச் சேதங்களுக்காக நாட்டின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த இழப்பீட்டை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்றும் இதனை உரியவர்களுக்கு மட்டுமே வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் பணிப்புரை விடுத்தார்.

உள்கட்டமைப்பு மேம்பாட்டை மீளாய்வு செய்த ஜனாதிபதி, இன்று (08) மின் விநியோகத்தையும், அடுத்த இரண்டு நாட்களுக்குள் நீர் விநியோகத்தையும் முழுமையாக்க மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அதிகாரிகளை பணித்தார்.
அத்துடன், எதிர்வரும் 16 ஆம் திகதிக்குள் அனைத்துப் பாடசாலைகளையும் மீள திறக்கவும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்குத் திறைசேரியால் வழங்கப்படும் 15,000 ரூபாவை டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் வழங்கி முடிக்கவும் உத்தரவிட்டார்.
இந்த அனர்த்தத்தால் அநுராதபுரம் மாவட்டத்தில் முழுமையாகச் சேதமடைந்த 228 வீடுகளைச் சேர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்கான துல்லியமான தரவுகளை உடனடியாகச் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.