தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு நிச்சயம்! ; ஜனாதிபதி உறுதி
இலஞ்சம் மற்றும் ஊழல் ஆகியவற்றை நாட்டின் மேல் மட்டத்தில் இருந்து இல்லாது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று பண்டாரவளையில் இடம்பெறும் மலையக சமூகத்திற்கு வீட்டு உரிமைகளை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
அதேநேரம் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் இருந்து ஒரு போதும் பின்வாங்கப் போவதில்லை எனவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, 200 வருடகாலமாக வாழும் ஒரு சமூகத்தினர் குறைந்த பட்சம் சிறிய அளவிலான காணி கூட இல்லாமல் இருக்கின்றனர். எனவே அவர்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு அரசாங்கம் என்ற வகையில் அவர்களது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கடமைப்பட்டுள்ளோம்.
தோட்டத்தில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தமக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு நீண்ட நாட்களாக கோரி வருகின்றனர். இந்த வருடத்தில் அந்த தொகையினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வறுமை, ஊட்டச் சத்து குறைபாடு, சுகாதார ரீதியான பாரிய பின்னடைவை மலையக மக்களே அதிகளவில் எதிர்நோக்கியுள்ளனர். எனவே அதில் கவனம் செலுத்தி சிறந்த சுகாதார சேவையினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அத்துடன் நாட்டில் சுத்தமான குடிநீரை வழங்க புதிய திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் முக்கியத்துவம் வழங்கப்படும்.
வறுமைக்கும், கல்விக்கும் பாரிய தொடர்பு உள்ளது. எனவே மக்களை வறுமையில் இருந்து மீட்டு எடுப்பதற்கு சிறந்த கல்வி திட்டத்தை உறுதி செய்வோம்.
மலையக மக்களின் கௌரவம் அடிமட்டத்தில் உள்ளது என்பதை அறிவோம். எனவே அவர்களது கலாச்சாரத்திற்கு மதிப்பளித்து அவர்களது சமூகத்தை வளர்ச்சியடைவதற்கு அனைத்து பணிகளும் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.