மன்னாரில் இலஞ்சம் கொடுத்த ஜனாதிபதி அநுரகுமார; குற்றம் கண்டுபிடித்த சுமந்திரன்!
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நேற்று (17) மன்னாரில் ஆற்றிய தேர்தல் பிரசார உரை முற்றும் முழுதாக தேர்தல் விதிமுறை மீறல் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஒருவகையில் தேர்தலில் மக்களுக்கு இலஞ்சம் கொடுப்பது போன்ற ஓர் உரையை அங்கு அவர் நிகழ்த்தியிருக்கின்றார் எனவும் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,
இலஞ்சம் கொடுத்து வாக்குத் திரட்டும் ஜனாதிபதி
மன்னார் நகர சபைக்குத் தமது தேசிய மக்கள் சக்தியினரை மக்கள் தெரிவு செய்தால், அந்த நிர்வாகத்தின் திட்டங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு நாம் அங்கீகாரம் வழங்கி நிதி ஒதுக்கீடு செய்வோம்.
வேறு தரப்பிடம் நிர்வாகம் போனால் அவர்களின் திட்டங்கள் குறித்து ஒன்றுக்குப் பத்துத் தடவை பரிசீலித்தே முடிவெடுப்போம் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அங்கு உரையாற்றி இருக்கின்றார் எனச் சுமந்திரன் சுட்டிக்காட்டுகின்றார்.
இந்த உரை அப்பட்டமாக தேர்தல் விதிமுறை மீறலாகும். இது தொடர்பில் நாம் தேர்தல் ஆணையத்திடம் உத்தியோகபூர்வமாக முறையிட இருக்கின்றோம். மக்களுக்கு இலஞ்சம் கொடுத்து வாக்குத் திரட்டும் சமயோசித பாணியே இந்த உரை.
இதற்கு எதிராக நாங்கள் சட்ட நடவடிக்கை எடுக்கக் கோருவோம் என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.